Saturday, January 12, 2008

மண்ணில் மலருமா தமிழ்ப்படம்?

கீழ்வரும் கட்டுரையைப் படியுங்கள். இது பிரபல எழுத்தாளர் ஒருவர் எழுதிய கட்டுரை. அவர் சொன்ன கருத்துகளை வைத்துப் பார்க்கையில், இன்றைக்கும் தமிழ் சினிமா மாறியிருக்கிறதா, இல்லையா என்ற முடிவுக்கு நீங்களே வாருங்கள்.

மண்ணில் மலருமா தமிழ்ப்படம்?

கலைத்தன்மை என்பது நம்முடைய பகுதியின் வாழ்க்கையை அதன் இன்ப துன்பங்களோடு சுவையாகப் பிரதிபலிப்பதாகும்.

கலை என்பது வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கக் கூடாது. அப்படியே பிரதிபலித்தால் சப்பென்று இருக்கும். ரியாலிட்டி என்பது வேறு, ரியலிசம் என்பது வேறு. ரியலிசம் மட்டுமே கலைக்குத் தேவை.

ஒரு மலையாளப் படத்தில் நாம் கேரள நாட்டு வாழ்வைக் காண்பதுபோல் தமிழ்ப்படத்தில் தமிழ்நாட்டு வாழ்வைக் காண முடியவில்லை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். வங்காளிகள் வங்காளப் படங்களைத் தயாரிப்பதுபோல், தமிழர்கள் தமிழ்ப்படங்கள் தயாரிப்பதில்லை என்றும் சொல்லலாம்.

மேல்நாட்டுப் படங்களைப் பார்த்து, வடக்கத்திய படங்களைப் பார்த்து, மலையாளிகளும் வங்காளிகளும் கதம்பக் கதைகளைத் தயாரிப்பதென்றால் அவர்களால் முடியாதா என்ன?

நம்மவர்களைவிட மிகவும் எளிய முறைகளில் இன்னும் திறமையாகவே செய்துவிடுவார்கள்! ஆனால் அவர்கள் தங்களுக்குக் ‘கலைஞர்கள்‘ என்ற புகழ் வரவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். பணத்துக்கும் விளம்பரத்துக்கும் மேலானது புகழ்.

புகழ் என்பது அந்த மக்களிடமே அந்த மக்களின் வாழ்வைக் கலையாக மாற்றிக்காட்டிச் சம்பாதிப்பது. அதற்காகவும் அவர்கள் உழைக்கிறார்கள்.

இந்திப் படங்களில் பல, இந்தியாவை மறந்து வருகின்றன. தமிழ்ப்படங்கள் பல தமிழ்நாட்டையே மறந்துவிடுகின்றன. தமிழ்நாட்டை தமிழ்ப்படங்கள் மறந்துவருவதால் என்ன விளைவு என்று கேட்கிறீர்களா?

கூடிய சீக்கிரமே இப்போது கிராமப்புறங்களில் சிறிதளவாவது ஒட்டிக்கொண்டிருக்கும் கலை வாழ்வு அறவே மறைந்துபோகும்.

கும்மி, கோலாட்டம், தாலாட்டு, நாட்டியம் போன்றவற்றை நம்முடைய பெண்கள் அறவே மறந்துவிடுவார்கள். ஒயிலாட்டம், கரகம், நாதசுரம், பரதம், இசைப்பாடல் முதலியவற்றுக்கு இனி இங்கே வேலை இருக்காது.

பண்பாடு என்பது பழைய தலைமுறைக்கே உரிய சொத்தாகி விடும். நம்முடைய இளைஞர் உலகம் - நடை, உடை, பாவனை முதலியவற்றோடு காதல் செய்யும் முறைகளையும் படங்களிலிருந்து கற்றுக்கொண்டு வருவதால், எதிர்காலத்தில் வழக்கறிஞர்கள், விவாகரத்துச் சட்டங்களில் தனிப்பயிற்சி பெறவேண்டிய அவசியம் ஏற்படும். எதிர்காலக் குடும்ப வாழ்வுக்கு அறைகூவல் இங்கிருந்துதான் கிளம்பியிருக்கிறது.

திரை மிகவும் சக்தி வாய்ந்த சாதனம். அதனால் வாழ்க்கையை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும், மாற்றவும் முடியும். ‘குறுகிய காலத்தில் குறுகிய உழைப்பில், குறுகிய வட்டத்தில் நிறைந்த லாபம்‘ என்ற நோக்கத்தை மட்டுமே அது கொண்டிருக்குமானால், அது ஆக்கப்பாதைக்குத் திரும்புவது அபூர்வம்தான்.

வங்காளிகளும் மலையாளிகளும் நம்மைவிடக் குறைந்த செலவில்தான் படங்களை எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் லாப நோக்கத்துடன்கூட தங்கள் தங்கள் மண்ணின் நலனுக்காகவும் மக்களின் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவும் சேர்ந்தே எடுக்கிறார்கள்.

நாம்..?

(எழுத்தாளர் அகிலன் அவர்கள் 1967-ம் வருடம் திரைப்படப் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையைத்தான் நீங்கள் மேலே படித்தீர்கள்.)

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.