Monday, February 27, 2017


பட்டொளி வீசி
சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் – திருப்பூர் கிருஷ்ணன்

சாகுந்தலம் கதையை முன்பே அறிந்திருப்பவர்கள், சகுந்தலையை வஞ்சிக்கப்பட்ட ஓர் அபலையாகத்தான் உணர்வார்கள் அவளின் நிலையை வைத்து. ஆனால், தங்களின் சகுந்தலையோ தன்னைத் தேடி வரும் துஷ்யந்தனின் கண்களைக் குறித்த வெளிப்பாடாக, ‘கண்களா இல்லை கட்டு விரியன்களா?’ என சகுந்தலையைச் சித்தரிப்பதோடு அல்லாமல், ‘‘துர்வாச மகரிஷியின் சாபத்தை நீ அறிய மாட்டாயா?’’ என்ற துஷ்யந்தனின் கேள்விக்கு, ‘முற்றும் துறந்த முனிவன் கோபத்தையும் சேர்த்துத் துறக்காததேன்? தூய நெறிப்பட்ட பத்தினிப் பெண்களின் காதல் வலிமையையும் தகர்த்துவிடுகிற வல்லமை துர்வாசரின் தவத்திற்கு என்றைக்கு வந்தது?” எனப் பதிலாகத் தரும் கட்டம், முனிவரின்மேல் உள்ள கோபத்தைவிட துஷ்யந்தனின் மேலேயே அதிகம் உள்ளது என்பதை அடுத்துவரும் கட்டங்களிலும் தெள்ளத் தெளிவாக விளக்குவதோடு, “நான் ஜாதியே இல்லாதவள் என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமை கொள்கிறேன்” எனக் கூறும் சகுந்தலையை அவளது அகக் கண், வரும் வருங்கால சந்ததியினர் எல்லாம் ‘கலியுகே பிரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே’ என சங்கல்பம் செய்யப்போவதை நினைக்கும் கட்டத்தில்தான் தங்களின் புதிய சாகுந்தல சகுந்தலையே நிற்கிறாள்.
இந்தியத் தத்துவ இயல் துறையின் பேராசிரியராக அமெரிக்கா சென்ற சசிசேகரன் – அமெரிக்காவில் அவனிடம் மாணவியாக, அதுவும் சொத்துள்ள மாணவியாகப் பயிலும் மேரி – ‘பணம் உள்ளவர்களுக்குத்தான் பணம் ஒரு பொருட்டில்லை என்பதில்லை; பணம் இல்லாதவர்களுக்கும்கூட பணம் ஒரு பொருட்டில்லாமல் இருக்கக்கூடும்’ எனக் கூறி மேரியின் சிந்தனையைத் தூண்டிவிடும் அதே சமயத்தில் கதையின் திருப்பத்திற்கும் காரணமாக விளங்கும் முனுசாமி இவர்களைப் பின்னிப் பிணைத்து புனையப்பட்டிருக்கும் ‘ஆகாச புஷ்பங்களில்’, சசிசேகரனுக்கும் மேரிக்கும் இடையே நடக்கும் வாக்குவாதங்களைப் படிக்கையில் அகிலனின் ‘எரிமலை’ சிறுகதையில் ‘பஞ்சு’ கேரக்டரை பஞ்சு பஞ்சாக்கும் அந்தப் புரட்சிப் பெண்ணை நினைவூட்டி விடுகிறாள் தங்களின் மேரி கேரக்டர். “உண்மையை மறைப்பவன்தான் ஆன்மீகவாதியா? மேரி என்ற என் பெயரை அவர் மீராவாக மாற்றிவிட்டாலும், நான் தேடுவது ராமனைத்தான்” என சசிசேகரனிடம் மேரி கூறும் கட்டமே கதையின் தலைப்பை கனகச்சிதமாகத் தூக்கிப் பிடிக்கிறது. மேலும், ரிக்ஷாவில் அவளை அழைத்துவந்த முனுசாமிதான் மேரி மணந்துகொள்ள இருந்த அந்த உயர்ந்த மனிதர் என்பதைக் காண்பிக்கும் கட்டம் புருவங்களையும் சற்றே உயர வைக்கிறது.
இங்கும் ஒரு கங்கை – இரவில் மலரும் தாமரைகள் – புதிய வெளிச்சம் எனும் மூன்று கதைகளும் ஒரே தோட்டத்தில் பூத்த விதவிதமான பூக்கள்.
இங்கும் ஒரு கங்கையில் தன் கணவன் செய்த பாவத்திற்காகவும், தான் எண்ணிய நினைப்புக்குமாக அம்புலு தன் மகன் சந்துருவை அவன் இன்வஸ்டிகேட் செய்யச் சென்ற விபசார விடுதியிலிருந்து கூட்டிவரும் பெயர் தெரியாத பெண்ணுக்கு ‘காயத்ரி’ என்ற பெயரை வைத்து அவளையே திருமணம் செய்துகொள்ளச் சொல்வது உணர்வுகளின் அடிப்படையில் சிறப்பாகக் காட்டப்பட்டாலும், யதார்த்தத்தை மீறிய கதையாகவே படுகிறது.
இரவில் மலரும் தாமரைகளிலோ, யதார்த்த நிலை அப்படியே அற்புதமாகச் சித்தரிக்கப்படுகிறது. பெயருக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்பதை லல்லிக்கு அம்புஜம் மூலம் தெரிவிக்கும் கட்டத்தோடு தோற்றத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைப் பெரியவரின் மகன் மூலமாக சித்தரிக்கும் காட்சியின் கதையமைப்பும் அற்புதம்.
புதிய வெளிச்சத்திலோ சாவித் துவாரத்தின் மூலமாக தந்தை தனது பூட்ஸுக்கு பாலீஷ் போட நேர்வதை கதையின் துவக்கமாக அமைத்து கதையின் கருவை நோக்கி கதையை நகர்த்தியிருக்கும் விதமும், மேலும் வாசகர்களுக்குள்ளே எழும் சந்தேக மற்றும் தர்க்க விவாதங்களை மகனது பாத்திரம் மூலமாக வலியுறுத்தி, தந்தையின் ஸ்தானத்தில் அதை தாங்கள் தீர்த்துவைக்கும் விதம் பாராட்டும்படியாக இருந்தாலும், இக்கதையைப் படித்துவிட்டு நண்பர் ஒருவரிடம் பேசும்பொழுது, ‘சொப்பன சுந்தரிகள்’, ‘உதிர்ந்த நட்சத்திரம்’ கதைகளை யதார்த்தமாக முடித்தவர், ‘புதிய வெளிச்சத்தில்’ கதையின் முடிவில் மனைவிக்கு காபி போட்டுக்கொண்டு வந்து கொடுப்பது போல முடித்திருப்பது யதார்த்தத்தைச் சற்று மீறியிருப்பது போலப் படுகிறது என விமர்சித்துவிட்டு, மீண்டும் இக்கதையை விமர்சிப்பதற்காக முடிவைப் படித்தபோது, பிளாஸ்கிலிருந்துதான் காபியைக் கொண்டுவந்து கொடுப்பதாகவே கதையை நீங்கள் முடித்திருக்கிறீர்கள். என்றாலும், நண்பரிடம் ‘புதிய வெளிச்சம்’ கதையை அவ்விதம் விமர்சிக்க வைத்தது எது என்று யோசிக்கையில், அக்கதையின் முடிவை ஜீரணிக்க முடியாத என் மனத்தின் தன்மையையா அல்லது கதையின் முடிவை அவ்விதம் முடித்ததாலா என்பதை இன்னமும் என்னால் அனுமானிக்க முடியவில்லை.
‘சொப்பன சுந்தரிகள்’, ‘உதிர்ந்த நட்சத்திரம்’ கதைகளில் வண்ணத்திரையின் பின்னுள்ள நாயகிகளை மையமாகக் கொண்டு அந்த நாயகிகளின் பிரச்னைகளை விவரித்து, திரையில் காண நேரும் நட்சத்திரங்களின் பிரகாசத்தை மட்டுமே கண்டு ஒளியால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகள் அழிய நேர்வதை திரையின் நாயகியே விரிவாகச் சொல்லியும் பெறும் தெளிவை, சுயமாகச் சிந்திக்கத் தெரியாமல் எல்லோர் பேச்சையும் கேட்க ஆரம்பித்தால் குழம்பி அழியத்தான் நேரிடும் என்பதை உடல் மற்றும் உள ரீதியாக ‘சொப்பன சுந்தரிகள்’ கதையின் வாயிலாகவும், உள ரீதியாக அழிவதை ‘உதிர்ந்த நட்சத்திரம்’ கதையின் வாயிலாகவும் யதார்த்தமாகக் காட்டியுள்ளீர்கள்.
‘மெல்லத் தமிழ் இனி’ கதையின் தலைப்பைப் பார்த்து கதையைப் படிக்கும்போது, தமிழ் இனி சாகும் என்பதைச் சொல்ல வருகிறீர்களோ என நினைத்துப் படித்தால், ‘மெல்லத் தமிழ் இனி நடை பயிலும்’ என்பதைச் சொல்லாமல் சொல்லி, ஹாஸ்யத்துடன் கூடிய வேதனையைப் படிப்பவர்களிடையே பதிய வைக்கிறீர்கள். நன்று.
‘பட்டொளி வீசி’ கதையும், ‘மெல்லத் தமிழ் இனி’ கதையைப் போன்றதொரு கதைதான். இதிலும் தன்மானத்தை விட இயலாமல், அதை வெளிப்படுத்தவும் முடியாமல் தவிக்கும் அஞ்சலையின் மன உணர்வுகளைப் படிக்கையில் வாசகர்களைக் கலங்கடித்து விடுகிறீர்கள்.
‘நீ ஏன் ஒரே சமயத்துல அழகாவும் புத்திசாலியாவும் இருக்கே அகில்?’ என்ற நவீனின் கேள்விக்கு, ‘அழகா இருக்கறவா புத்திசாலியா இருந்தா கஷ்டம் நவீன்’ என்ற அகிலாவின் பதிலில், ‘தனக்கும் கஷ்டம்; மற்றவர்களுக்கும் கஷ்டம்’ என்கிற த்வனி ஒலிப்பதுடன், தொடர்ந்து அவள் கூறும் பதிலில் உண்மைகள் இழையோடினாலும், கமலக் கண்ணனுக்கும் கண்கள் இருந்திருந்தால் அழகைத்தான் ஆராதித்திருப்பார் என்ற முடிவுக்கு ‘காகிதக் கமலங்கள்’ கதையில் வாசகரைத் தள்ளிவிட்டு, அழகு அடையும் வேதனைகளை ஒரு பெண்ணாக நின்று பார்த்திருந்தாலும், ‘ஊனமுள்ளவர்களுக்கோ வயசானவர்களுக்கோதான் பிச்சை போடுவோம். அது காதல் பிச்சையானாலும் சரி’ என்ற அகிலாவின் கூற்றை, நிச்சயம் விமர்சகனாக நின்று பார்த்தாலும்கூட ஏற்க முடியவில்லை.
ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் என்கிற வகையில், ‘மறுபடியும் அவன் முகம்’ என்ற கதையில் கோமதியின் முகத்தைக் காட்டுகிறீர்கள். ஏமாற்றப்பட்டது தெரிந்தபின்னரும் நினைவுகளை விலக்கமுடியாமல், ‘நினைவு முகத்தை’க் கொண்டு தவிக்கும் பெண்ணின் தவிப்பைப் பிரதிபலிக்கும் கதை.
நிர்பந்தங்களால் திசை மாறும் கப்பல்களை ‘நிர்பந்தங்கள்’, ‘திசை மாறும் கப்பல்’ கதைகளில் வெளிப்படுத்தும் தாங்கள், ‘சங்கீத சங்கமங்களிலோ’ தான் அடைய நினைப்பதை புத்தி சாதுர்யமிருந்தால் அடையலாம் எனக் கோடிட்டுக் காட்டுகிறீர்கள்.
பொதுவில் தங்கள் கதைகள், வாழ்வியல் பிரச்னைகளுக்கான தீர்வை, வெளிச்சம் போட்டுக் காட்டும் குழல் விளக்காக உள்ளன.
- சைதை முரளி.

Thursday, January 12, 2017

சென்னையில் ஒரு தட்சிணேஸ்வரம்

சென்னையில் ஒரு தட்சிணேஸ்வரம்
- சைதை முரளி
தச மஹா வித்தையில் தலையாய இடத்தை வகிப்பவள் காளி. அந்தக் காளி கோயில் கொண்டுள்ள தலையாய இடமோ கொல்கத்தாவிலுள்ள தட்சிணேஸ்வரம்.
தன்னை வணங்குபவர்களுக்கு அதியற்புத சக்திகளை வழங்கவல்ல காளியே, அச்சக்திகளை ஒருவர் தவறுதலாக அழிவுக்குப் பயன்படுத்தினால் அவர்களை அடக்கவும் வல்லவள்.
“தாயினும் சாலப் பரிந்து பாதுகாப்பவள் என் அன்னை’ என, காளியின் பேரன்பில் திளைத்துக் கூறுகிறார் இராமகிருஷ்ண பரமஹம்ஸர். இவரின் சீடரான விவேகானந்தரோ, “தீமைகளை எதிர்த்துப் போரிடக்கூடிய துணிவைத் தருபவள் காளி’ என்கிறார்.
காளிதாசனுக்குக் கவிதையாற்றலை நல்கிக் கருணை புரிந்தவள்.
நம் மனோபலம் பெருகவும், மனோவியாதி நிவாரணம் அடையவும், ஞாபக சக்தி வளரவும், எதிரிகளை வெல்லவும், அவமானங்களிலிருந்து காப்பாற்றப்படவும், தரித்திரம் நீங்கவும் வேண்டி நாம் காளியை வழிபடலாம்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸரும், விவேகானந்தரும், பரமஹம்ச யோகானந்தரும் வழிபட்ட காளியை நாம் தட்சிணேஸ்வரம் சென்றுதான் வணங்கவேண்டும் என்றில்லாமல், ஸர்வ வியாபியான அவளைச் சென்னையிலேயே கண்டு வழிபடும்படியாக தட்சிணேஸ்வரக் கோயில் அமைப்பிலேயே அமைத்து வழிபடும் படியாகச் செய்திருக்கிறது சென்னை காளி பாரி (Mச்ஞீணூச்ண் ஓச்டூடி ஆச்ணூடி).
இக்காளி கோயிலுக்கான அடிக்கல் சுவாமி தபஸ்யானந்தரால் 1975ஆம் வருடம் ஜூன் மாதம் 21ஆம் தேதி நாட்டப்பட்டு, 17,400 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட இக்காளி கோயில் 1981ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி சுவாமி லோகேஸ்வரானந்தாவால் திறக்கப்பட்டது.

தட்சிணேஸ்வர காளியின் நாமமான “பவதாரிணி’ என்ற நாமமே இங்குள்ள காளிக்கும் வழங்கப்படுகிறது. மேற்கு மாம்பலம் உமாபதி தெரு விரிவில் அமைந்துள்ள இக்காளி கோயிலில் காளி சிவனின் மீது ஏறி நின்ற வண்ணமாகக் காட்சியளிக்கிறாள். இராமகிருஷ்ண பரமஹம்ஸர் மற்றும் அன்னை சாரதாதேவியின் திருவுருவச் சிலைகள் சன்னிதி முன்பாக குரு தரிசனமாகக் கிடைக்கிறது. அன்னையைச் சுற்றிவரும் பிராகாரத்தில் பின்புறமாக ஈஸ்வரனும் (பவானீஸ்வரர்) கணபதியுமாக (பவானி நந்தன்) அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
காளி என்றால் செயல்பாட்டின் வடிவம். மின்காந்த சக்தியாக வெளி எங்கும் பரவி நிற்பவள் காளி. மின்காந்த சக்தி வெளியுடன்(குணீச்ஞிஞு) கலந்து உறவாடும்பொழுது அது காலத்தை உருவாக்குகிறது.
கலந்து உறவாடல் என்பது அடிப்படை நிகழ்ச்சி. சக்தியானது விரைந்து செயலாற்றக் கூடியது எனில், மூலமாகிய வெளியோ இயக்கமற்ற நிலையில் இருக்கிறது.
இயக்கமற்ற நிலையில் வெளியானது இருப்பினும் அதற்கு சக்தி இல்லையென்று அர்ததம் கொண்டுவிடக் கூடாது. வெளியானது ஓய்வில் இருக்கும் சக்தி. அதாவது, சக்திக்கே சக்தியைத் தரும் ஆதார சக்தி. பாரதியார் இதனையே, “ஆத்மா உணர்வு; சக்தி செய்கை’ என்று குறிப்பிடுகிறார்.
சக்தியானது செயல்வடிவமாக வடிவம் பெறும்வரை உணர்வுமயமான உடையைப் போர்த்திக் கொள்கிறது. செயல்பாட்டில் இறங்கிவிட்டாலோ உணர்வு என்கிற உடை உதறப்படுகிறது. இக்கருத்தின் காரணமாகவே, “காளி’யானவள் சித்திரப் படங்களில் ஆடைகள் அற்ற நிலையில் சித்திரிக்கப்படுகிறாள்.
மேலும் பரவெளியாக எங்கும் உள்ள நிலையான சிவத்தின் மீது, “காலத்தை வெளிக்கொணரும் காளி’ நின்று செயல்படுவதால், கோயிலில் சிவனின்மீது காளி நிற்பது போன்ற கோலம் சித்திரிக்கப்படுகிறது.
மாயை வடிவினள் காளி. மாயையாக இருக்கும் இவள் செயல்படத் தொடங்கினால், காலமும் வெளியும் மாறும் தன்மை உடையதாக மாறிவிடும்.
தசமஹா வித்தையில் காளி இருவிதங்களில் வணங்கப்படுகிறாள். தட்சிணக் காளி - வாழும் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருபவள்; சம்ஹாரக் காளியோ இல்வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டு வீடுபேற்றை அளிப்பவள்.
“பவதாரிணி’ என்ற நாமத்திற்கே, பிறப்பு இறப்பினின்றும் நம்மைக் காப்பாற்றுபவள் என்று பொருள்.
தட்சிணக் காளியை பக்தர்கள் சரணடையும் பொழுது அகம் மகிழ்ந்து நமக்கு மகிழ்ச்சியை நல்குவதுடன், சம்ஹாரக் காளியாக மாறி நம் மீது கருணை வைத்து மாயையினின்று நம்மை விடுவித்து மஹா சமாதி நிலையைத் தந்து மீண்டும் பிறப்பில்லா நிலையை நல்குகிறாள்.
காளி தன் கையில் ரத்தம் சொட்டும் தலையை ஏந்தியிருப்பதானது, உடல் மற்றும் செய்கையிலிருந்து ஒட்டுதல் இல்லாமல் தூய அறிவை, அதாவது, மரணத்தைப் போன்ற சமாதியை உயிர்களுக்கு அவள் நல்குவதையே அது குறிக்கிறது. காளி ஏந்தியிருக்கும் தலை, உயிருள்ள தலையே! காயியே ஏந்திய பிறகு, எவ்விதம் அது இறக்க முடியும்?
ராமநவமி, கிருஷ்ண ஜயந்தி மற்றும் துர்க்கா பூஜை பண்டிகைக் காலங்களில் காளிக்கு பூஜைகள் பெரிய அளவில் நடத்தப் பெறுகின்றன. இக்காலங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அமாவாசை தினங்களில் இங்கு காளிக்கு சிறப்புப் பூஜை நடைபெறுவதுடன் அன்றிரவு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

குருவருள் இருந்தால் திருவருள் கிட்டும் என்பார்கள்.

“”கடவுளை நேரில் காணமுடியுமா? அவரின் தரிசனம் கிட்டுமா?’’ என நரேன் எனும் விவேகானந்தர் குருதேவரிடம் கேட்க, “”இதோ நீ இப்போது என்னைக் காண்பதுபோல் அன்னை பவதாரிணியைக் காணமுடியும்’’ எனக் கூறுகிறார் குருதேவர்.
“”அன்னையிடம் எது கேட்டாலும் கிடைக்குமா? எனக்கு வாழ்க்கைக்குப் பொருள் வேண்டியிருக்கிறது’’ என குருதேவரிடம் குழந்தையாகக் கேட்கிறான் நரேன்.
“”நிச்சயம் கிடைக்கும்’’ என உறுதி கூறுகிறார் குருதேவர்.
“”எனக்காக நீங்கள் கேட்கக் கூடாதா?’’
“”நீயே உனக்கு வேண்டியதைக் கேள். அன்னை நிச்சயம் அருள்வாள்’’ என்கிறார் குருதேவர்.
“”அப்படியானால் அன்னையை நீங்களே எனக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும்’’ என வேண்டுகோள் வைக்கிறான் நரேன்.
“”நாளை காலையில் குளித்துவிட்டு பக்தி சிரத்தையுடன் வா. அவள் உனக்கு தரிசனம் தருவாள்’’ என்கிறார்.
இரவு முழுவதும் உறங்கவில்லை நரேன். அன்னையின் தரிசனத்தைவிட அன்னையிடம் என்னவெல்லாம் கேட்கலாம் என்ற யோசனையே முன் நிற்கிறது.
பொழுது புலர்ந்ததுதான் தாமதம். குளித்துவிட்டு வேகமாக குருதேவரை நோக்கி ஓடுகிறான் நரேன்.
அன்னைக்கான பூஜைகளை முடித்துவிட்டு இந்தப் பிரிய சீடனின் வரவுக்காகக் காத்திருக்கிறார் குருதேவர்.
“”வா குழந்தாய்! உள்ளே அன்னையிடம் சென்று உனக்குப் பிரியமானதை, தேவையானவற்றை நீயே கேட்டுப் பெறு. அன்னையும் உன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்’’ என சன்னிதியின் உள்ளே அனுப்பினார்.
அன்னையின் முன்சென்று நிற்கிறான் நரேன். மற்றவர்களுக்குச் சிலா ரூபமாகக் காட்சி தரும் அன்னை குருவருளால் நரேனுக்கு சித் ஸ்வரூபமாகக் காட்சி தருகிறாள். பார்த்துக்கொண்டே நிற்கிறான் நரேன். சிலை உயிர்பெற்று வந்தால், பக்தர்கள் சிலையாகி விடுவர் போலும்! அன்னையின் அழகை அள்ளிப் பருகுகிறான். அன்னை, ““நரேந்திரா! உனக்கு என்ன வேண்டும்?’’ எனக் கேட்கிறாள். அன்னையின் கேள்வி நரேனின் காதில் உட்புகவில்லை. அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறான். காட்சி முடித்து அன்னை சிலா ரூபமாகி விடுகிறாள். வெளியே வருகிறான் நரேன்.
கேட்கிறார் குருதேவர்: “”என்ன நரேன்? அன்னையைக் கண்டாயா? உன் குறைகளைச் சொல்லி தீர்வு கண்டாயா?’’ எனச் சிரித்துக்கொண்டே கேட்கிறார். குருவுக்குத் தெரியாததா?
சுய உணர்வு பெறும் நரேன், “”அன்னையைக் கண்டேன். ஆனால், எதுவும் கேட்கத் தோன்றவில்லை. மெய்மறந்து நின்றுவிட்டேன். இன்னொரு முறை நீங்கள் அனுமதித்தால், அன்னையிடம் நிச்சயம் கேட்டுவிடுவேன்’’ என்கிறான்.
“”சரி, நாளை வா’’ என அனுப்பி வைக்கிறார் குருதேவர்.
மறுநாளும் வருகிறான். இதேபோலவே நிகழ்வு நடக்கிறது. எதுவும் கேட்கவில்லை. 
“”இன்னும் ஒரேமுறை. எப்படியிருந்தாலும் இம்முறை கேட்டுவிடுவேன்’’ என்கிறான் பாலகன் நரேன்.
அதற்கடுத்த நாளும் நிகழ்வில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
குருதேவர் நரேனைப் பார்த்து, “”என்ன இம்முறையாவது கேட்டாயா? அன்னை அருளை வாரி வழங்கினாளா?’’ அவர் குழந்தையாகிக் கேட்டார்.
“”இல்லை.. இல்லை.. இல்லை.. அன்னையின் முன்னால் சென்று அவள் திருவுருவைத் தரிசிக்கும்போது எதுவுமே எனக்குக் கேட்கத் தோன்றவில்லை. என் இருப்பே அங்கு இல்லாமல் அவள் திருவருளின் முன்னே கரைந்துவிடுகிறது. பின்னர் எதைக் கேட்கமுடியும்? நினைப்பு என்ற ஒன்றிருந்தால் அல்லவா எதுவும் கேட்க முடியும்? எனக்காக நீங்கள் கேட்கக் கூடாதா?’’ என்று உள்ளம் குழைந்து கேட்கிறான் நரேன்.
“”உனக்கே அப்படியென்றால், சதா சர்வகாலமும் அவளையே தியானம் செய்து தரிசித்துக்கொண்டிருக்கும் எனக்கு எப்படியப்பா கேட்க முடியும்? என்னால் முடியாது என்பதால்தானே உன்னையே அவளிடம் கேட்கச் சொன்னேன். இனி, அவள் உனக்குக் காட்சி தர மாட்டாள். உனக்கு அருளப்பட்ட சந்தர்ப்பம் முடிவுபெற்றது’’ என குருதேவர் கூறிமுடிக்க, நரேன் அவர் காலில் விழுந்து கதறுகிறான்.
“”எனக்கு எதுவும் வேண்டாம் குருதேவா. அன்னையின் காட்சி மட்டும் கிடைத்துக் கொண்டிருந்தால் போதும். அருள்புரியுங்கள்’’ என குருதேவரிடம் மன்றாடுகிறான்.
“”இனி, உனக்கு இறை காட்சி கிட்டாது’’ என ஆணித்தரமாக மறுத்துவிடுகிறார் குருதேவர்.
இதன்பின்னர் மூன்று நாட்கள் அன்ன ஆகாரம் இல்லாமல், ஊண் உறக்கமின்றி அழுதவாறே அன்னையின் நினைவாகவே உன்மத்தனாக இருந்தான் நரேன். மூன்றாம் நாள் முடிவில் அன்னை பவதாரிணி அவருக்குக் காட்சி தந்து மறைந்தாள். உடன் குருதேவரை நோக்கி ஓடினான் நரேன்.
“”குருதேவா! அன்னையின் காட்சி இனி எனக்குக் கிடைக்காது என்று ஏன் அப்படிச் சொன்னீர்கள்? அன்னை இன்று எனக்குக் காட்சி தந்தாள்’’ என்று பூவாகி மலர்ந்து சிரித்தான் விவேகானந்தராய்.
“”அன்னையின் தரிசனம் உனக்கு எப்படிக் கிடைத்தது?’’ என அவரும் ஒன்றுமறியாத பாலகராய் கேட்டார்.
நடந்ததைச் சொன்னார் விவேகானந்தர்.
“”இன்று உன்னை ஆதாரமாக வைத்துச் சொல்கிறேன். எவர் ஒருவர் இறை தரிசனத்துக்காக மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி, ஊண் உறக்கமில்லாமல் இறை நினைவாகவே அவரை நினைந்து அழுகிறாரோ அவருக்கும் இறை தரிசனம் நிச்சயம் கிட்டும்’’ என்ற வரத்தை அளித்தார்.

அந்த அன்னையின் பாதார விந்தங்களைப் பணிவோம். சிவத்தின் மீதுதான் அன்னை நிற்கிறாள் என நினைக்காதீர்கள். நம் மனத்திலும் இருத்துங்கள் அவளை. அவளும் எப்போதும் அன்பு செய்யும் வரத்தைத் தப்பாது தந்தருள்வாள் என்பதில் ஐயமே இல்லை.

Wednesday, August 26, 2015

திருப்பாச்சிலாச்சிராம தேவாரத் திருப்பதிகம்

நண்பர் யெஸ். பாலபாரதி அவர்களின் ‘துலக்கம்’ மற்றும் ‘சந்துருவுக்கு என்னாச்சு?’ என்ற நூல்களைப் படித்தபோதுதான் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது. இப்பேர்ப்பட்டவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்ற வினா என்னுள் எழ, அதற்கான ஆன்மிகத் தீர்வைத் தேடி அலைந்தேன். சமீபத்தில் ‘பிடி அரிசி’ வாங்கச் சென்றபோது, ஆன்மிக
மூத்த எழுத்தாளர் மற்றும் தல வரலாற்று ஆராய்ச்சியாளர் மஹேந்திரவாடி உமாசங்கரன் அவர்களிடம் இதுகுறித்துப் பேசினேன். தீர்வு கிடைத்திட, மிகவும் மகிழ்ந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இது தவிர, தினசரி வழிபாட்டு நூலான பலன் தரும் திருமுறைப் பதிகங்கள் நூலை மேற்கு தாம்பரம் லிங்கன் டீ கம்பெனி நிறுவனத்தார் முன்னர் இலவசமாகவே தந்துள்ளார். பின்னர் 10 ரூபாய்க்குத் தந்துள்ளனர். தற்போது ரூபாய் 20-க்கு ஈசா & கோ நிறுவனத்தினர் (மேற்கூறிய அதே லிங்கன் டீ நிறுவனம்தான்) 200 பக்கங்கள் அடங்கிய மேற்படி நூலை வெளியிட்டு ஆன்மிகத் தொண்டாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி நவில்கிறேன். அந்நூலின் குறிப்பையே இங்கு பயன்படுத்தியுள்ளேன்.

மேலும், இத்திருப்பதிகம் மற்றும் அத்தலம் சார்ந்த விரிவான விவரங்களை கீழ்த் தந்துள்ள இணைப்பில் காணலாம். மேலும் இத்திருப்பதிகப் பாடலையும் இங்கு தந்துள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.shivatemples.com/nofct/nct62.php

http://temple.dinamalar.com/New.php?id=118

http://www.shaivam.org/gallery/audio/tis-tns-nalamiku-padhikangal.htm




திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருப்பாச்சிலாச்சிராம தேவாரத் திருப்பதிகம்

முதல் திருமுறை 44-வது திருப்பதிகம்.

பண் - தக்கராகம்
இராகம் - காம்போதி
இறைவர் - மாற்றறிவரதர்
இறைவி - பாலசௌந்தரி





இரத்த அழுத்தம், நீரழிவு நோய், நரம்புத் தளர்ச்சி மற்றும் குடிபோதையில் சிக்கித் தவிப்பவர்களும் மீண்டு வாழ ஓதவேண்டிய பதிகம்.

திருஞான சம்பந்தப் பெருமான் பல தலங்களையும் தரிசித்தபடி, மழநாட்டைச் சேர்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் எனும் தலத்திற்கு வந்து சேர்ந்தார். அந்நாட்டு மன்னன் கொல்லிமழவனுடைய மகள் ‘முயலகன்’ என்னும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தாள். சம்பந்தப் பெருமானை வரவேற்ற மன்னன், தனது மகளின் நோயைத் தீர்க்கும்படி வேண்டிக்கொண்டான். 

அதன்படி சம்பந்தப் பெருமான் இத்திருப்பதிகத்தைப் பாடி, மன்னனின் மகளைப் பீடித்திருந்த நோயைக் குணமாக்கினார்.

இத்திருப்பதிகத்தை 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், மேற்கண்ட நோய்கள் குணமாகும் என்பது திண்ணம். 

துணி வளர் திங்கள் துளங்கி விளங்கச் 
சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ 
ஆர் இடமும் பலி தேர்வர்
அணி வளர் கோலம்எலாம் செய்து பாச்சில்
ஆச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ மங்கையை வாட 
மயல் செய்வதோ இவர் மாண்பே 1

கலை புனை மான்உரி தோல்உடை ஆடை
கனல்சுடரால் இவர் கண்கள்
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் 
தம் அடிகள் இவர் என்ன
அலை புனல் பூம்பொழில் சூழ்ந்து அமர் பாச்சில்
ஆச்சிராமத்து உறைகின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட 
இடர் செய்வதோ இவர் ஈடே. 2

வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை 
வேண்டுவர் பூண்பது வெண்நூல்
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக 
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் 
சிதை செய்வதோ இவர் சீரே. 3

கன மலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் 
கனல் தரு தூ மதிக்கண்ணி
புன மலர்மாலை அணிந்து அழகாய 
புனிதர் கொல் ஆம் இவர் என்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட 
மயல் செய்வதோ இவர் மாண்பே. 4

மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி 
வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழாக் குழல் தாளம் ஓர் வீணை 
முதிர ஓர் வாய்மூரி பாடி
ஆந்தைவிழிச் சிறு பூதத்தர் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ தையலை வாடச் 
சதுர்செய்வதோ இவர் சார்வே. 5

நீறுமெய் பூசி நிறைசடை தாழ 
நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி
ஆறுஅது சூடி ஆடரவு ஆட்டி 
ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
ஏறுஅது ஏறியர் ஏழையை வாட 
இடர் செய்வதோ இவர் ஈடே. 6

பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு
ஆமை வெண்நூல் புனை கொன்றை
கொங்கு இள மாலை புனைந்து அழகாய 
குழகர்கொல்ஆம் இவர் என்ன
அங்கு இளமங்கை ஓர் பங்கினர் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச் 
சதிர் செய்வதோ இவர் சார்வே. 7

ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து 
இராவணனை ஈடு அழித்து
மூவரிலும் முதலாய் நடுவாய 
மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் எழில் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள்தேவரோ சேயிழை வாடச் 
சிதை செய்வதோ இவர் சேர்வே. 8

மேலது நான்முகன் எய்தியது இல்லை 
கீழ்அது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை 
என இவர் நின்றதும் அல்லால்
ஆல் அது மா மதி தோய்பொழில் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ பைந்தொடி வாடப் 
பழி செய்வதோ இவர் பண்பே. 9

நாணொடு கூடிய சாயினரேனும் 
நகுவர் அவர் இருபோதும்
ஊணொடு கூடிய உட்கும் நகையால் 
உரைகள் அவை கொள வேண்டா
ஆணொடு பெண்வடிவு ஆயினர் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப் 
புனை செய்வதோ இவர் பொற்பே. 10

அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க 
ஆச்சிராமத்து உறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகாய 
புனிதர் கொலாம் இவர் என்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி 
நல்தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண்தமிழ் கொண்டு இவை ஏத்தச் 
சாரகிலா வினைதானே. 11

திருச்சிற்றம்பலம்

Monday, September 26, 2011

இலக்கியச் சிந்தனையின் 500-வது மாதக்கூட்டம்!

தீபம் ஆசிரியர் நா.பார்த்தசாரதியுடனான
அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனின்
சுகமான நினைவுகள்...
- சைதை முரளி.

எழுதுவதற்கு விஷயங்கள் இல்லை; எனவே, படிப்பதற்கு வாசகர்கள் இல்லை என்று சொன்னால் இதை நீங்கள் ஏற்பீர்களா? நீங்கள் ஏற்க மறுத்தாலும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது நிலைமை என்பதாக, கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் இலக்கியச் சிந்தனையின் கூட்டங்கள் மூலமாக அறிகிறேன்.

வார, மாத இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளைப் படித்து அதிலிருந்து சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த மாதத்தின் சிறந்த சிறுகதை என்று சொல்லி ஊக்கப்படுத்தி வந்த இலக்கியச் சிந்தனை அமைப்பு, இனி அந்த வருடத்தில் வந்த எல்லா சிறுகதைகளில் இருந்தும் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.



சிறுகதைகள் எழுதும் கதாசிரியர்கள் குறைந்துவிட்டீர்களா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்ற பதிலை உறுதியாகக் கூறலாம். ஒரு பக்கக் கதைகள், அரை பக்கக் கதைகள், போஸ்ட் கார்டு கதைகள், ஸ்டாம்ப் சைஸ் கதைகள் என கதைகளை வெளியிட்டு வந்த சில பத்திரிகைகள் நாளடைவில் கதைகளை வெளியிடுவதையே நிறுத்திக்கொண்டுவிட்டன. காரணம் கேட்டால், முன்பு போல் அவ்வளவாக சிறுகதைகள் வருவதில்லை; படிப்பவர்களும் குறைந்துவிட்டார்கள் என்ற பதிலைத் தருகிறார்கள்.



என்ன காரணங்கள் கூறினாலும், கதைகளை வெளியிட்டால்தானே கதைகளை எழுதுபவர்களுக்கும் உற்சாகம் ஏற்பட்டு தொடர்ந்து நிறைய எழுதுவார்கள். நாவல்களின் போக்கும் கிட்டத்தட்ட இதேபோன்று ஆகிவிட்டது. சிறுகதை ஆசிரியர்கள் நாவல் ஆசிரியர் நிலைக்குச் செல்ல, நிறைய சிறுகதைகள் எழுதும் போக்கும் அதை வெளியிடுதலும் தொடர்ந்தால்தானே அந்த நிலைக்கு உயர இயலும். ஏனோ ஒருசில பத்திரிகைகள் சிறுகதைகள் வெளியிடும் போக்கையே ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட்டனவோ என்று தோன்றும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது நிலைமை. இந்நிலவரத்தைப் பார்க்கையில் கலவரமாகத்தான் இருக்கிறது. கதைகள் வருவது குறைந்துவிட்டது என்று பத்திரிகையில் இருப்பவர்கள் கூறாமல், அவர்களே கதை எழுதி வெளியிட்டால், வெளியிலிருந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை தன்னால் கூடும். புதிய எழுத்தாளர்கள் பலரும் தோன்றுவார்கள் அல்லவா!



தீபாவளி மலரில்தான் சிறுகதைகளைப் பார்க்க இயலுமோ என்ற நிலை வந்துள்ளது. இந்நிலைகள் மாற, உரியவர்கள் சிறப்பு கவனம் செலுத்தினாலே போதும்! நம் கலைகள் அழிவுற, நாமே காரணகர்த்தா ஆகிவிடக் கூடாது.

கடந்த செப்.24 கடைசி சனிக்கிழமையன்று மாலை இலக்கியச் சிந்தனையின் 500-வது மாதாந்தரக் கூட்டம், எப்போதும்போல் ஆழ்வார்பேட்டை அஞ்சலகம் அருகிலுள்ள ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில் (செட்டியார் ஹால் எதிரில்) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், தீபம் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்களுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். நினைவுகள் என்றும் சுகமானவைதாமே!



நா.பா.வுடனான திருப்பூர் கிருஷ்ணனின் அந்த சுகமான நினைவுகளில் ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம். தினமணியில் மார்ச் மாதத்தில் அவர் தீபம் நா.பா. குறித்து எழுதியவற்றை இங்கே காணலாம். இலக்கியச் சிந்தனை கூட்டத்தில் அவர் பேசியதன் ஒரு பகுதியை முகநூல் இணைப்பில் கண்டு மகிழலாம்.

‘நா.பா. என்னை ஒரு தம்பியாகவே கருதினார். அவர் வீட்டிலிருக்கும்போது வரும் போன் கால்களை நான்தான் எடுத்துப் பேசுவேன். ஒருமுறை நா.பா. அவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது அப்போது முதலமைச்சராக இருந்த மக்கள் திலகம் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இதை அறிந்ததும் குளித்துக்கொண்டிருந்தவரிடம் என்ன சொல்ல என்று கேட்டேன். ‘ஒரு பத்து நிமிடம் கழித்து பேசச் சொல்’ என்றார் என்னிடம். நானும் மறுமுனையில் இருந்தவரிடம் இதைச் சொன்னேன்.



குளித்துவிட்டு வந்தவர் என்னிடம், ‘கூட்டங்களில் அவரை நான் தாக்கித்தானே பேசுகிறேன். எதற்காக என்னைத் தொடர்புகொள்கிறார் தெரியவில்லையே’ என்று கூறிவிட்டு என் கருத்தையும் அறியும் விதமாக ‘நீங்கள் அவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் மக்கள் சமுதாயத்தால் நன்றாக மதிக்கப்படும் ஒரு நபர், வெற்றிபெற்ற மனிதராகத்தானே இருக்கமுடியும்’ என்ற என் கருத்தை வைத்தேன்.



‘நீங்கள் கூறுவது சரியென்றால், பத்து நிமிடத்தில் தொடர்புகொள்ளச் சொன்ன நேரத்துக்கு சரியாக அவர் தொடர்பு கொள்வார், பாருங்கள்’ என்றார். அவர் கூறியபடியே சரியாக பத்து நிமிடம் கழித்து அழைப்பு வந்தது. ‘எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் போன், எடுத்துப் பேசுங்கள்’ என்றார். எடுத்துப் பேசினேன். மக்கள் திலகம்தான் பேசினார். இந்த நிகழ்விலிருந்து வெற்றிபெ(ற்ற)றும் மனிதர்கள் நேரத்தைத் தவறாமல் மதிப்பார்கள் என்ற படிப்பினையைப் பெற்றேன்.

சாகித்ய அகாதெமி பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு உள்படப் பல பரிசுகள் பெற்ற நா.பா., சிறந்த பேச்சாளரும் கூட. தற்கால இலக்கியம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் தம் பேச்சாற்றலால் முத்திரை பதித்தவர்.



ஒருசமயம் சென்னை வானொலியில் குற்றாலக் குறவஞ்சி குறித்து பேசச் சென்றார். அப்போது வானொலிப் பதிவைப் புதிதாக இருந்த ஒருவரிடம் பதியும்படி சொல்லிவிட்டு நிகழ்ச்சி மேற்பார்வையாளர் வேறு ஒரு வேலைநிமித்தமாக சென்றுவிட்டார். ஒரு மணி நேர ஒலிப்பதிவு நிகழ்ச்சி. ஒலிப்பதிவைச் செய்தவரும் நானும் பேச்சில் மெய்மறந்து போயிருந்தோம். ஒரு மணி நேரம் முடிவடையப் போகிறது என்பதை குறிப்பால் சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் நா.பா.வை வழியனுப்புவதற்காக நிகழ்ச்சி மேற்பார்வையாளர் வெளியே அவருடன் வந்தார். நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்த அந்த புதிய நபரோ நா.பா.விடம் பேசவேண்டும் என்று துடித்தார். இதைப் புரிந்துகொண்ட நா.பா. அவரை வரவழைத்து என்ன விஷயம் என்று கேட்டார். பதிவு செய்த ஒரு மணி நேர ஒலிப்பதிவு பதிவாகவில்லை என்றார். உடன் நா.பா. நான் செல்லவிருக்கும் பயணம் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான். இப்போதே மீண்டும் அந்த ஒலிப்பதிவைத் தொடங்குவோம் வாருங்கள் என்று அந்த இளைஞரை உடன் அழைத்துச் சென்றார். நிகழ்ச்சி மேற்பார்வையாளரிடம் இந்த இளைஞர் இனி தவறு செய்ய மாட்டார். நீங்கள் பயப்படாமல் செலலுங்கள் என்று இளைஞரின் பயத்தையும் போக்கி அரவணைத்துக்கொண்டார்.



நா.பா. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இறுதிவரை நடுத்தரக் குடும்ப மனிதராகவே வாழ்ந்து மறைந்தார். பொருளாதார இடர்ப்பாடுகள் வரத்தான் செய்தன. ஆனால், எழுத்தைப் பொறுத்தவரை சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த பெருந்தகை அவர். அக்காலகட்டத்தில் சோ, ஜெயகாந்தன் ஆகியோரோடு நா.பா.வும் ஸ்தாபன காங்கிரஸ் மேடைகளில் பேசினார். பேச்சுக்கு ரூ.500 தருவார்கள். ஒரு கட்டத்தில் குடும்பச் சூழ்நிலையினால் இதுவும் பற்றவில்லை. ‘கொஞ்சம் கூடுதலாகத் தந்தால் நன்றாக இருக்கும். என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?’ என என்னிடம் ஆலோசித்தார். நான் அவரிடம், ‘காமராஜருக்கு நெருக்கமாக இருந்த ஒரு எழுத்தாள நண்பரிடம் பேச்சோடு பேச்சாக பேசச் சொல்லுங்களேன்’ என்ற ஆலோசனையை முன்வைத்தேன். இதுவும் நல்ல யோசனைதான் என்றவர், அவ்விதமே பேசவும் செய்தார். பேச்சின் பலனாக பேச்சுக்கு இரட்டிப்பாகப் பணம் தரும்படி காமராஜர் உத்தரவிட்டார்.



தமது ‘சத்தியவெள்ளம்’ என்ற நாவலில் காமராஜரை ராமராஜ் என்ற பெயரில் பாத்திரமாக ஆக்கும் அளவுக்கு நா.பா.வைக் கவர்ந்திருந்தார் காமராஜர். காமராஜர் காலமானதும் அவரின் அட்டைப்படம் தீபத்தை அலங்கரித்தது. ‘இலக்கியப் பத்திரிகை அட்டையில் அரசியல் தலைவரின் படமா?’ என்று சிலர் கேள்வி கேட்டார்கள். ‘பெருந்தலைவரே ஓர் இலக்கியம்தான்’ என்று நா.பா. பதில் சொன்னார்.



ஒரு கட்டத்தில் பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக தாம் நடத்திவந்த தீபத்தை நிறுத்திவிடப் போவதாக நா.பா. அறிவிப்பு செய்திருந்தார். இதைப் பார்த்த ஒரு சகோதரி தம் தங்க வளையல்களை பார்சலில் அனுப்பிவைத்து இதழைத் தொடர்ந்து கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதில் மிகவும் நெகிழ்ந்துபோன நா.பா. தம் காலம் வரையில் தீபத்தைத் தொடர்ந்து நடத்திவந்தார்.




இதுபோன்ற எவ்வளவோ நெகிழ்வான நினைவுகளை திருப்பூர் கிருஷ்ணன் அன்றைய கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார். அவற்றில் ஒருசிலவற்றைத்தான், அவற்றையும் சுருக்கி இங்கே உங்களிடம் பதிவு செய்துள்ளேன். அன்றைய கூட்டத்தில் எழுத்தாளர் இந்துமதி, கவிஞர் ஜெயபாஸ்கரன் போன்ற பல்வேறு எழுத்துலகப் பிரமுகர்களும் பங்கேற்றனர். விழாவில் இலக்கியச் சிந்தனை பாரதி அவர்களுக்கு, இந்துமதி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.





பேச்சின் இடையில் இந்த ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தின் வெளியில் இருக்கும் துளசிச் செடியில் மகாத்மா காந்தியின் அஸ்தியும் கலந்துள்ளது என்ற தகவலை திருப்பூர் கிருஷ்ணன் சொல்ல, அந்த துளசி மாடத்தை உங்கள் பார்வைக்குப் பதிவாக்கியுள்ளேன்.

Friday, June 10, 2011

அஞ்சலி - கணையாழி கஸ்தூரிரங்கன்



ஆதிமுதல் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, சிறந்த பத்திரிகையாளராக விளங்கிய சுவாசித் கஸ்தூரி ரங்கன் அவர்கள் கணையாழியின் புரவலராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். 1961 முதல் 1981 வரை டில்லியில் ‘நியூயார்க் டைம்ஸ்’ நிருபராகவும், 1981 முதல் பத்தாண்டுகளுக்கு ‘தினமணி’ பத்திரிகையின் இணையாசிரியராகவும், இதன்பின்னர் இரண்டாண்டுகளுக்கு ‘தினமணி’ ஆசிரியராகவும் பணியாற்றியவர். சமீபத்தில் அமரரான கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில் ஜுன் 5-ஆம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரை, நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலில் பஜனை நடைபெற்றது. பின்னர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் கணையாழி ஆசிரியர் குறித்துப் பேசினார்:



‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்’ என்ற பாடல், கஸ்தூரிரங்கன் அவர்களின் மனப்போக்குக்கு, லட்சியத்துக்கு, ஆன்மாவுக்கு நிறைவைத் தரக்கூடியதாக அமைந்திருந்தது. பாடலை ஆத்மார்த்தமாகப் பாடிய குழுவினருக்கு நன்றி’ எனக் கூறி, மேலும் தன் உரையைத் தொடர்ந்தார்.



‘‘ஓவியர்கள், ஓவியத்தின் கீழே தங்கள் பெயரைப் போட்டுக்கொள்கிறார்கள். சிற்பிகள் சிற்பத்தில் தங்கள் பெயரைப் பொறிப்பதில்லை. கஸ்தூரிரங்கன் ஒரு ஓவியரல்ல; அவர் ஒரு சிற்பி. தன்னுடைய புகைப்படம்கூட பத்திரிகையில் வருவதை அவர் விரும்பியதில்லை. கணையாழி பத்திரிகை மூலமாக எண்ணற்ற எழுத்தாளர்களை அவர் உருவாக்கினார். இந்த எழுத்தாளர்களின் தொடக்ககால எழுத்துகளை இனங்கண்டு கணையாழியில் வெளியிட்டு அந்த எழுத்தாளர்களை வளர்த்தார்.

“இந்த அஞ்சலி கூட்டத்தில் கஸ்தூரிரங்கன் அவர்களின் எந்த எழுத்துகளை வாசிப்பது என கஸ்தூரிரங்கனின் புதல்வி, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி போன்றோரிடம் கலந்தாலோசித்ததில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள், கணையாழி களஞ்சியத்தில் வெளிவந்த அவரின் முன்னுரையை வாசிக்கலாமே எனக் கூறியது பொருத்தமாகப்பட்டதால் அதை இங்கே வாசிக்கிறேன்’’ எனக் கூறி அந்த முன்னுரையை வாசித்தார்.

அந்த முன்னுரையிலிருந்து ஒரு பகுதியைப் பார்ப்போம்.

‘புது டில்லி. பொழுதுபோகாத ஒரு மாலை வேளை. நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்த போது பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது. அன்றைய விலைவாசியில் 5 ரூபாய் இருந்தால், 32 பக்கங்களில் 1000 பிரதிகளை அச்சடித்து விடலாம். ஆண்டுச்சந்தா ரூ.5/- என்று ஒரு ஆயிரம் பேரைப் பிடித்துவிடலாம். மேலும் 500 முதல் 5000 பிரதிகள் வரை ஏஜென்ட்டுகள் மூலம் விற்றுவிட, 10,000, 50,000 என்று சென்று 5 லட்சம் வரைகூட எட்டிவிடலாம் என்று திட்டமிட்டோம். பேஷாகச் செய்துவிடலாம் என்றார் ரங்கராஜன்.’



இவ்விதமாகத்தான் கணையாழி என்கிற அந்த இலக்கியத்தரம் வாய்ந்த பத்திரிகை தொடங்கப்பட்டது. கணையாழி களஞ்சியம் தயாரித்தபோது தொடக்க காலம் முதலே வெளிவந்த இதழ்களை வைத்திருந்து பெரிதும் களஞ்சியமாக வெளிவர எழுத்தாளர் வே.சபாநாயகம் உதவினார் என்று கஸ்தூரிரங்கன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்ததை திருப்பூர் கிருஷ்ணன் வாசித்தார்.

ஒருமுறை கணையாழி நிர்வாக ஆசிரியரான கஸ்தூரிரங்கனிடம், கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்த லா.சு. ரங்கராஜன் அவர்கள், ‘தினமணி’ ஆசிரியர் பதவியில் தொடர்ந்து நீடிப்பீர்களா என அவரிடம் கேட்க, அதற்கு அவர்,



‘‘கணையாழியின் நெடுநாள் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். கணையாழி விற்பனையை கல்கி நிறுவனத்தினர் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டிருப்பது பெரிய அதிர்ஷ்டமே. தினமணி ஆசிரியராக மீண்டும் பொறுப்பேற்க நேர்ந்தாலும் அதில் அதிகநாள் நீடிக்க விரும்பவில்லை. எப்போதும்போல் பின்னணியிலிருந்து கொண்டே கணையாழியை வளர்ப்பதில் கருத்தாய் இருப்பேன்.



‘‘மேலும், தினமணியில் மக்கள் நல்லாட்சி மன்றங்கள் அமைப்பதற்காக வாசகர்களின் ஆலோசனை கேட்டு அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு பதிலளித்து சுமார் இரண்டாயிரம் வாசகர்கள் இயக்கத்தில் சேர முன்வந்துள்ளார்கள். இவர்களைக் கொண்டு கிராமம்தோறும் நல்லாட்சி மன்றங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட விரும்புகிறேன்’’ எனத் தெரிவித்தார்.



அக்கூட்டத்தின் ஒருசில வீடியோ லிங்குகளை பேஸ்புக்கில் தந்துள்ளேன்.

http://www.facebook.com/video/video.php?v=10150203045866092

http://www.facebook.com/video/video.php?v=10150203040141092

http://www.facebook.com/video/video.php?v=10150203031316092

கணையாழிக்காகவே வாழ்ந்தவருக்கு நாமும் அஞ்சலி செலுத்துவோம்.

Thursday, May 5, 2011

இந்தியத் திரைப்படத்தின் தந்தை - தாதா சாகிப் பால்கே



தாதா சாகிப் பால்கே

சமீபத்தில் தமிழ்த் திரையுலகப் பிதாமகனான இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது என்ற செய்தியை செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். அவருக்கு இந்த விருது வழங்கியது சரிதானா, சரியில்லையா என்ற சர்ச்சைகள் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அவற்றையெல்லாம் விடுங்கள். இந்த விருதுக்கு மூலகாரணமாக விளங்கும் தாதா சாகிப் பால்கே என்பவர் யார்? ஏன் அவர் பெயரால் இந்த விருதை வழங்குகிறார்கள் என்பதைப் பற்றி சற்றே தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.

பம்பாய்க்கு அருகிலுள்ள நாசிக் எனுமிடத்தில் 1870&ல் பிறந்தார் தாதா சாகிப். சித்திரம் தீட்டுதல், நடிப்பு, பாடுதல், மாய வித்தைகள் செய்தல் போன்றவற்றில் சிறுவயது முதலே அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவரின் இந்த அளவற்ற ஆர்வமே இவரை இந்தியத் திரையுலகின் முன்னோடியாக விளங்க வைத்ததுடன், முதல் இந்தியத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடவைத்து, இந்தியத் திரையுலகின் தந்தை எனப் போற்றிக்கொண்டாடும் அளவுக்கு இவரை உயர்த்தியது எனலாம்.

பம்பாய் சர்.ஜே.ஜே. கலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றார். 1910&ஆம் ஆண்டில் பம்பாய் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, இயேசு கிறிஸ்துவின் வாழ்வியலைச் சித்திரிக்கும் திரைப்படமொன்றை வெளியிட்டுக் காட்டினார்கள். அப்படத்துக்கு மக்களிடையே ஏற்பட்ட ஈர்ப்பும் வரவேற்பும், ஏன் தாமும் கிருஷ்ண பரமாத்மாவின் கதையைத் திரைப்பட வடிவில் காட்டக் கூடாது என்ற எண்ணத்தை பால்கேவின் மனதுள் விதைத்தது.

இதன்பின்னர் தமது நண்பர்களிடம் பணத்தைக் கடனாகப் பெற்று இங்கிலாந்து சென்று திரைப்படம் தயாரிப்பதற்குத் தேவையான கருவிகளை வாங்கினார். மேலும், அக்கருவிகளைக் கையாளும் முறையையும் கற்றுக்கொண்டு தாயகத்துக்குத் திரும்பினார்.

கிருஷ்ண பரமாத்மாவின் கதையைப் படமாக்க எண்ணிய அவரின் முதல் நோக்கம், பின்னர் அப்படம் தயாரிப்பதற்கு உண்டாகும் நாட்செலவு மற்றும் பொருட்செலவையும் கருத்தில் கொண்டதால், இந்திய மக்களை எளிதில் கவரக்கூடிய அரிச்சந்திர அரசனின் கதையைப் படமாக்குவதென்ற முடிவுக்கு அவரை உந்தித் தள்ளியது. எனவே, அரிச்சந்திர அரசனின் கதையைப் படமாக்க முடிவெடுத்தார்.

பால்கே திரைப்படம் தயாரிக்க விழைந்த அன்றைய இந்தியாவில், பெண்கள் மேடையேறி நடிப்பதென்பது சமூகக் கோட்பாடுகளுக்கு ஒவ்வாத செயலாக இருந்த காலம். அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி பாத்திரத்தில் நற்குலப் பெண்கள்கூட நடிக்க இசைய மாட்டார்கள் என்பதை பால்கே நன்கு உணர்ந்திருந்தார். ஏனெனில், பெண்கள் திரைப்படத்தில் நடித்தால் அவர்கள் மானத்துக்குப் பங்கம் ஏற்படும் என்று கருதிய காலகட்டம் அது. எனவே, அந்தப் பாத்திரத்தில் விலைமாதரையாவது நடிக்க வைக்கலாம் என்று கருதி பால்கே அவர்களை அணுகினார். அவர்களும் மறுக்கவே, முடிவாகத் தமது படத்தில் சலுங்கே எனும் இளைஞனை அந்தப் பெண் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தார்.

‘ராஜா ஹரிச்சந்திரா’ எனும் இந்த மௌனப்படமே, இந்திய மண்ணில் முதன்முதலில் தோன்றிய படமாகும். இப்படத்தின் நீளம் 3,700 அடி. 1912&ஆம் ஆண்டில், தாதா சாகிப் பால்கே இப்படத்தைத் தயாரித்து முடித்தார். 1913&ஆம் ஆண்டில் பம்பாய் நகரில் இப்படம் திரையிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டாண்டுகளுக்குள் நூற்றுக்கும் அதிகமான படங்களைத் தயாரித்து வெளியிட்ட செயல், பால்கேவின் அயராத உழைப்பினைப் பறைசாற்றும் ஒன்றாகும். இந்திய மக்களின் பெரும் சொத்துக்களாகக் கருதப்படும் ராமாயண, மகாபாரதக் கதைகளைத் தழுவியே அவர் தன் அத்தனைப் படங்களையும் தயாரித்து வெளியிட்டார். தன்னைத் திரையுலகுக்குள் செலுத்த மூலகாரணமாயிருந்த கிருஷ்ண பரமாத்மாவின் கதையையும் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டார் பால்கே.

1917&ல் நண்பர்கள் ஐவருடன் சேர்ந்து, ‘ஹிந்துஸ்தான் திரைப்படக் கம்பனி’யை பால்கே ஆரம்பித்தார். பின் அவர்களிடையே நிலவிய கொள்கை வேறுபாட்டால், ஓராண்டுக்குப் பின் அவர்களைவிட்டுப் பிரிந்தார். 1921&ஆம் ஆண்டில் மீண்டும் அவர்களுடன் ஒன்று சேர்ந்தார். 1927&ஆம் ஆண்டில் பால்கே ஹிந்துஸ்தான் திரைப்படக் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றார். இதன்பின் 1931&ஆம் ஆண்டில் ‘சேத்து பந்தன்‘, ‘கங்காவதாரென்’ என்ற இரு படங்களைத் தயாரித்தார். இந்தக் காலகட்டத்தில் மக்களின் கலாரசனைகளும் விருப்பு வெறுப்புகளும் பெரிதும் மாறுபட்டிருந்ததால், இவ்விரு படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் பெருத்த ஏமாற்றமடைந்தார் பால்கே.

தம் வாழ்வு முழுவதையுமே திரைப்படத்துறைக்காக அர்ப்பணித்த அந்த மாமேதை, தம் இறுதி நாட்களில் எல்லோராலும் கைவிடப்பட்டவராக, ஏழையாக 1944&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16&ஆம் நாளில் தம் இன்னுயிரை நீத்தார்.

இப்படிப்பட்ட அந்த மாமேதையின் பெயராலேயே ‘தாதா சாகிப் பால்கே’ விருது என்ற இந்த விருது வழங்கப்படுகிறது.

Thursday, November 11, 2010

சென்னை சைதை செங்குந்தகோட்ட சிவசுப்ரமண்யசாமி கோயிலின் சூரசம்ஹார வைபவம் / 11.11.2010

இன்று சென்னை சைதை செங்குந்த கோட்டம் சிவசுப்ரமண்ய சுவாமி கோயிலின் சார்பாக நடைபெற்ற சூரசம்ஹார வைபவத்தில் நான் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்காக. முதல் மூன்று புகைப்படங்கள் தேவ அசுர போராட்டத்தைக் காணக் காத்திருக்கும் (முருகன் மற்றும் சூரன் வருகைக்காகக் காத்திருக்கும்) பக்த வெள்ளம். அதன்பின் சூரன் வருகை, முருகன் வீரபாகை தூது விடுதல், அதன்பின் படிப்படியாக சூர வதம், முடிவில் கற்பூர ஆரத்தி என என்னால் இயன்றதை, என் கையடக்க கேமராவில் க்ளிக்கியதை, காணாதவர்கள் கண்டுகளிப்பதற்காக இங்கே தந்திருக்கிறேன்.















































About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.