Monday, February 27, 2017


பட்டொளி வீசி
சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் – திருப்பூர் கிருஷ்ணன்

சாகுந்தலம் கதையை முன்பே அறிந்திருப்பவர்கள், சகுந்தலையை வஞ்சிக்கப்பட்ட ஓர் அபலையாகத்தான் உணர்வார்கள் அவளின் நிலையை வைத்து. ஆனால், தங்களின் சகுந்தலையோ தன்னைத் தேடி வரும் துஷ்யந்தனின் கண்களைக் குறித்த வெளிப்பாடாக, ‘கண்களா இல்லை கட்டு விரியன்களா?’ என சகுந்தலையைச் சித்தரிப்பதோடு அல்லாமல், ‘‘துர்வாச மகரிஷியின் சாபத்தை நீ அறிய மாட்டாயா?’’ என்ற துஷ்யந்தனின் கேள்விக்கு, ‘முற்றும் துறந்த முனிவன் கோபத்தையும் சேர்த்துத் துறக்காததேன்? தூய நெறிப்பட்ட பத்தினிப் பெண்களின் காதல் வலிமையையும் தகர்த்துவிடுகிற வல்லமை துர்வாசரின் தவத்திற்கு என்றைக்கு வந்தது?” எனப் பதிலாகத் தரும் கட்டம், முனிவரின்மேல் உள்ள கோபத்தைவிட துஷ்யந்தனின் மேலேயே அதிகம் உள்ளது என்பதை அடுத்துவரும் கட்டங்களிலும் தெள்ளத் தெளிவாக விளக்குவதோடு, “நான் ஜாதியே இல்லாதவள் என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமை கொள்கிறேன்” எனக் கூறும் சகுந்தலையை அவளது அகக் கண், வரும் வருங்கால சந்ததியினர் எல்லாம் ‘கலியுகே பிரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே’ என சங்கல்பம் செய்யப்போவதை நினைக்கும் கட்டத்தில்தான் தங்களின் புதிய சாகுந்தல சகுந்தலையே நிற்கிறாள்.
இந்தியத் தத்துவ இயல் துறையின் பேராசிரியராக அமெரிக்கா சென்ற சசிசேகரன் – அமெரிக்காவில் அவனிடம் மாணவியாக, அதுவும் சொத்துள்ள மாணவியாகப் பயிலும் மேரி – ‘பணம் உள்ளவர்களுக்குத்தான் பணம் ஒரு பொருட்டில்லை என்பதில்லை; பணம் இல்லாதவர்களுக்கும்கூட பணம் ஒரு பொருட்டில்லாமல் இருக்கக்கூடும்’ எனக் கூறி மேரியின் சிந்தனையைத் தூண்டிவிடும் அதே சமயத்தில் கதையின் திருப்பத்திற்கும் காரணமாக விளங்கும் முனுசாமி இவர்களைப் பின்னிப் பிணைத்து புனையப்பட்டிருக்கும் ‘ஆகாச புஷ்பங்களில்’, சசிசேகரனுக்கும் மேரிக்கும் இடையே நடக்கும் வாக்குவாதங்களைப் படிக்கையில் அகிலனின் ‘எரிமலை’ சிறுகதையில் ‘பஞ்சு’ கேரக்டரை பஞ்சு பஞ்சாக்கும் அந்தப் புரட்சிப் பெண்ணை நினைவூட்டி விடுகிறாள் தங்களின் மேரி கேரக்டர். “உண்மையை மறைப்பவன்தான் ஆன்மீகவாதியா? மேரி என்ற என் பெயரை அவர் மீராவாக மாற்றிவிட்டாலும், நான் தேடுவது ராமனைத்தான்” என சசிசேகரனிடம் மேரி கூறும் கட்டமே கதையின் தலைப்பை கனகச்சிதமாகத் தூக்கிப் பிடிக்கிறது. மேலும், ரிக்ஷாவில் அவளை அழைத்துவந்த முனுசாமிதான் மேரி மணந்துகொள்ள இருந்த அந்த உயர்ந்த மனிதர் என்பதைக் காண்பிக்கும் கட்டம் புருவங்களையும் சற்றே உயர வைக்கிறது.
இங்கும் ஒரு கங்கை – இரவில் மலரும் தாமரைகள் – புதிய வெளிச்சம் எனும் மூன்று கதைகளும் ஒரே தோட்டத்தில் பூத்த விதவிதமான பூக்கள்.
இங்கும் ஒரு கங்கையில் தன் கணவன் செய்த பாவத்திற்காகவும், தான் எண்ணிய நினைப்புக்குமாக அம்புலு தன் மகன் சந்துருவை அவன் இன்வஸ்டிகேட் செய்யச் சென்ற விபசார விடுதியிலிருந்து கூட்டிவரும் பெயர் தெரியாத பெண்ணுக்கு ‘காயத்ரி’ என்ற பெயரை வைத்து அவளையே திருமணம் செய்துகொள்ளச் சொல்வது உணர்வுகளின் அடிப்படையில் சிறப்பாகக் காட்டப்பட்டாலும், யதார்த்தத்தை மீறிய கதையாகவே படுகிறது.
இரவில் மலரும் தாமரைகளிலோ, யதார்த்த நிலை அப்படியே அற்புதமாகச் சித்தரிக்கப்படுகிறது. பெயருக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்பதை லல்லிக்கு அம்புஜம் மூலம் தெரிவிக்கும் கட்டத்தோடு தோற்றத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைப் பெரியவரின் மகன் மூலமாக சித்தரிக்கும் காட்சியின் கதையமைப்பும் அற்புதம்.
புதிய வெளிச்சத்திலோ சாவித் துவாரத்தின் மூலமாக தந்தை தனது பூட்ஸுக்கு பாலீஷ் போட நேர்வதை கதையின் துவக்கமாக அமைத்து கதையின் கருவை நோக்கி கதையை நகர்த்தியிருக்கும் விதமும், மேலும் வாசகர்களுக்குள்ளே எழும் சந்தேக மற்றும் தர்க்க விவாதங்களை மகனது பாத்திரம் மூலமாக வலியுறுத்தி, தந்தையின் ஸ்தானத்தில் அதை தாங்கள் தீர்த்துவைக்கும் விதம் பாராட்டும்படியாக இருந்தாலும், இக்கதையைப் படித்துவிட்டு நண்பர் ஒருவரிடம் பேசும்பொழுது, ‘சொப்பன சுந்தரிகள்’, ‘உதிர்ந்த நட்சத்திரம்’ கதைகளை யதார்த்தமாக முடித்தவர், ‘புதிய வெளிச்சத்தில்’ கதையின் முடிவில் மனைவிக்கு காபி போட்டுக்கொண்டு வந்து கொடுப்பது போல முடித்திருப்பது யதார்த்தத்தைச் சற்று மீறியிருப்பது போலப் படுகிறது என விமர்சித்துவிட்டு, மீண்டும் இக்கதையை விமர்சிப்பதற்காக முடிவைப் படித்தபோது, பிளாஸ்கிலிருந்துதான் காபியைக் கொண்டுவந்து கொடுப்பதாகவே கதையை நீங்கள் முடித்திருக்கிறீர்கள். என்றாலும், நண்பரிடம் ‘புதிய வெளிச்சம்’ கதையை அவ்விதம் விமர்சிக்க வைத்தது எது என்று யோசிக்கையில், அக்கதையின் முடிவை ஜீரணிக்க முடியாத என் மனத்தின் தன்மையையா அல்லது கதையின் முடிவை அவ்விதம் முடித்ததாலா என்பதை இன்னமும் என்னால் அனுமானிக்க முடியவில்லை.
‘சொப்பன சுந்தரிகள்’, ‘உதிர்ந்த நட்சத்திரம்’ கதைகளில் வண்ணத்திரையின் பின்னுள்ள நாயகிகளை மையமாகக் கொண்டு அந்த நாயகிகளின் பிரச்னைகளை விவரித்து, திரையில் காண நேரும் நட்சத்திரங்களின் பிரகாசத்தை மட்டுமே கண்டு ஒளியால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகள் அழிய நேர்வதை திரையின் நாயகியே விரிவாகச் சொல்லியும் பெறும் தெளிவை, சுயமாகச் சிந்திக்கத் தெரியாமல் எல்லோர் பேச்சையும் கேட்க ஆரம்பித்தால் குழம்பி அழியத்தான் நேரிடும் என்பதை உடல் மற்றும் உள ரீதியாக ‘சொப்பன சுந்தரிகள்’ கதையின் வாயிலாகவும், உள ரீதியாக அழிவதை ‘உதிர்ந்த நட்சத்திரம்’ கதையின் வாயிலாகவும் யதார்த்தமாகக் காட்டியுள்ளீர்கள்.
‘மெல்லத் தமிழ் இனி’ கதையின் தலைப்பைப் பார்த்து கதையைப் படிக்கும்போது, தமிழ் இனி சாகும் என்பதைச் சொல்ல வருகிறீர்களோ என நினைத்துப் படித்தால், ‘மெல்லத் தமிழ் இனி நடை பயிலும்’ என்பதைச் சொல்லாமல் சொல்லி, ஹாஸ்யத்துடன் கூடிய வேதனையைப் படிப்பவர்களிடையே பதிய வைக்கிறீர்கள். நன்று.
‘பட்டொளி வீசி’ கதையும், ‘மெல்லத் தமிழ் இனி’ கதையைப் போன்றதொரு கதைதான். இதிலும் தன்மானத்தை விட இயலாமல், அதை வெளிப்படுத்தவும் முடியாமல் தவிக்கும் அஞ்சலையின் மன உணர்வுகளைப் படிக்கையில் வாசகர்களைக் கலங்கடித்து விடுகிறீர்கள்.
‘நீ ஏன் ஒரே சமயத்துல அழகாவும் புத்திசாலியாவும் இருக்கே அகில்?’ என்ற நவீனின் கேள்விக்கு, ‘அழகா இருக்கறவா புத்திசாலியா இருந்தா கஷ்டம் நவீன்’ என்ற அகிலாவின் பதிலில், ‘தனக்கும் கஷ்டம்; மற்றவர்களுக்கும் கஷ்டம்’ என்கிற த்வனி ஒலிப்பதுடன், தொடர்ந்து அவள் கூறும் பதிலில் உண்மைகள் இழையோடினாலும், கமலக் கண்ணனுக்கும் கண்கள் இருந்திருந்தால் அழகைத்தான் ஆராதித்திருப்பார் என்ற முடிவுக்கு ‘காகிதக் கமலங்கள்’ கதையில் வாசகரைத் தள்ளிவிட்டு, அழகு அடையும் வேதனைகளை ஒரு பெண்ணாக நின்று பார்த்திருந்தாலும், ‘ஊனமுள்ளவர்களுக்கோ வயசானவர்களுக்கோதான் பிச்சை போடுவோம். அது காதல் பிச்சையானாலும் சரி’ என்ற அகிலாவின் கூற்றை, நிச்சயம் விமர்சகனாக நின்று பார்த்தாலும்கூட ஏற்க முடியவில்லை.
ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் என்கிற வகையில், ‘மறுபடியும் அவன் முகம்’ என்ற கதையில் கோமதியின் முகத்தைக் காட்டுகிறீர்கள். ஏமாற்றப்பட்டது தெரிந்தபின்னரும் நினைவுகளை விலக்கமுடியாமல், ‘நினைவு முகத்தை’க் கொண்டு தவிக்கும் பெண்ணின் தவிப்பைப் பிரதிபலிக்கும் கதை.
நிர்பந்தங்களால் திசை மாறும் கப்பல்களை ‘நிர்பந்தங்கள்’, ‘திசை மாறும் கப்பல்’ கதைகளில் வெளிப்படுத்தும் தாங்கள், ‘சங்கீத சங்கமங்களிலோ’ தான் அடைய நினைப்பதை புத்தி சாதுர்யமிருந்தால் அடையலாம் எனக் கோடிட்டுக் காட்டுகிறீர்கள்.
பொதுவில் தங்கள் கதைகள், வாழ்வியல் பிரச்னைகளுக்கான தீர்வை, வெளிச்சம் போட்டுக் காட்டும் குழல் விளக்காக உள்ளன.
- சைதை முரளி.

Thursday, January 12, 2017

சென்னையில் ஒரு தட்சிணேஸ்வரம்

சென்னையில் ஒரு தட்சிணேஸ்வரம்
- சைதை முரளி
தச மஹா வித்தையில் தலையாய இடத்தை வகிப்பவள் காளி. அந்தக் காளி கோயில் கொண்டுள்ள தலையாய இடமோ கொல்கத்தாவிலுள்ள தட்சிணேஸ்வரம்.
தன்னை வணங்குபவர்களுக்கு அதியற்புத சக்திகளை வழங்கவல்ல காளியே, அச்சக்திகளை ஒருவர் தவறுதலாக அழிவுக்குப் பயன்படுத்தினால் அவர்களை அடக்கவும் வல்லவள்.
“தாயினும் சாலப் பரிந்து பாதுகாப்பவள் என் அன்னை’ என, காளியின் பேரன்பில் திளைத்துக் கூறுகிறார் இராமகிருஷ்ண பரமஹம்ஸர். இவரின் சீடரான விவேகானந்தரோ, “தீமைகளை எதிர்த்துப் போரிடக்கூடிய துணிவைத் தருபவள் காளி’ என்கிறார்.
காளிதாசனுக்குக் கவிதையாற்றலை நல்கிக் கருணை புரிந்தவள்.
நம் மனோபலம் பெருகவும், மனோவியாதி நிவாரணம் அடையவும், ஞாபக சக்தி வளரவும், எதிரிகளை வெல்லவும், அவமானங்களிலிருந்து காப்பாற்றப்படவும், தரித்திரம் நீங்கவும் வேண்டி நாம் காளியை வழிபடலாம்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸரும், விவேகானந்தரும், பரமஹம்ச யோகானந்தரும் வழிபட்ட காளியை நாம் தட்சிணேஸ்வரம் சென்றுதான் வணங்கவேண்டும் என்றில்லாமல், ஸர்வ வியாபியான அவளைச் சென்னையிலேயே கண்டு வழிபடும்படியாக தட்சிணேஸ்வரக் கோயில் அமைப்பிலேயே அமைத்து வழிபடும் படியாகச் செய்திருக்கிறது சென்னை காளி பாரி (Mச்ஞீணூச்ண் ஓச்டூடி ஆச்ணூடி).
இக்காளி கோயிலுக்கான அடிக்கல் சுவாமி தபஸ்யானந்தரால் 1975ஆம் வருடம் ஜூன் மாதம் 21ஆம் தேதி நாட்டப்பட்டு, 17,400 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட இக்காளி கோயில் 1981ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி சுவாமி லோகேஸ்வரானந்தாவால் திறக்கப்பட்டது.

தட்சிணேஸ்வர காளியின் நாமமான “பவதாரிணி’ என்ற நாமமே இங்குள்ள காளிக்கும் வழங்கப்படுகிறது. மேற்கு மாம்பலம் உமாபதி தெரு விரிவில் அமைந்துள்ள இக்காளி கோயிலில் காளி சிவனின் மீது ஏறி நின்ற வண்ணமாகக் காட்சியளிக்கிறாள். இராமகிருஷ்ண பரமஹம்ஸர் மற்றும் அன்னை சாரதாதேவியின் திருவுருவச் சிலைகள் சன்னிதி முன்பாக குரு தரிசனமாகக் கிடைக்கிறது. அன்னையைச் சுற்றிவரும் பிராகாரத்தில் பின்புறமாக ஈஸ்வரனும் (பவானீஸ்வரர்) கணபதியுமாக (பவானி நந்தன்) அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
காளி என்றால் செயல்பாட்டின் வடிவம். மின்காந்த சக்தியாக வெளி எங்கும் பரவி நிற்பவள் காளி. மின்காந்த சக்தி வெளியுடன்(குணீச்ஞிஞு) கலந்து உறவாடும்பொழுது அது காலத்தை உருவாக்குகிறது.
கலந்து உறவாடல் என்பது அடிப்படை நிகழ்ச்சி. சக்தியானது விரைந்து செயலாற்றக் கூடியது எனில், மூலமாகிய வெளியோ இயக்கமற்ற நிலையில் இருக்கிறது.
இயக்கமற்ற நிலையில் வெளியானது இருப்பினும் அதற்கு சக்தி இல்லையென்று அர்ததம் கொண்டுவிடக் கூடாது. வெளியானது ஓய்வில் இருக்கும் சக்தி. அதாவது, சக்திக்கே சக்தியைத் தரும் ஆதார சக்தி. பாரதியார் இதனையே, “ஆத்மா உணர்வு; சக்தி செய்கை’ என்று குறிப்பிடுகிறார்.
சக்தியானது செயல்வடிவமாக வடிவம் பெறும்வரை உணர்வுமயமான உடையைப் போர்த்திக் கொள்கிறது. செயல்பாட்டில் இறங்கிவிட்டாலோ உணர்வு என்கிற உடை உதறப்படுகிறது. இக்கருத்தின் காரணமாகவே, “காளி’யானவள் சித்திரப் படங்களில் ஆடைகள் அற்ற நிலையில் சித்திரிக்கப்படுகிறாள்.
மேலும் பரவெளியாக எங்கும் உள்ள நிலையான சிவத்தின் மீது, “காலத்தை வெளிக்கொணரும் காளி’ நின்று செயல்படுவதால், கோயிலில் சிவனின்மீது காளி நிற்பது போன்ற கோலம் சித்திரிக்கப்படுகிறது.
மாயை வடிவினள் காளி. மாயையாக இருக்கும் இவள் செயல்படத் தொடங்கினால், காலமும் வெளியும் மாறும் தன்மை உடையதாக மாறிவிடும்.
தசமஹா வித்தையில் காளி இருவிதங்களில் வணங்கப்படுகிறாள். தட்சிணக் காளி - வாழும் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருபவள்; சம்ஹாரக் காளியோ இல்வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டு வீடுபேற்றை அளிப்பவள்.
“பவதாரிணி’ என்ற நாமத்திற்கே, பிறப்பு இறப்பினின்றும் நம்மைக் காப்பாற்றுபவள் என்று பொருள்.
தட்சிணக் காளியை பக்தர்கள் சரணடையும் பொழுது அகம் மகிழ்ந்து நமக்கு மகிழ்ச்சியை நல்குவதுடன், சம்ஹாரக் காளியாக மாறி நம் மீது கருணை வைத்து மாயையினின்று நம்மை விடுவித்து மஹா சமாதி நிலையைத் தந்து மீண்டும் பிறப்பில்லா நிலையை நல்குகிறாள்.
காளி தன் கையில் ரத்தம் சொட்டும் தலையை ஏந்தியிருப்பதானது, உடல் மற்றும் செய்கையிலிருந்து ஒட்டுதல் இல்லாமல் தூய அறிவை, அதாவது, மரணத்தைப் போன்ற சமாதியை உயிர்களுக்கு அவள் நல்குவதையே அது குறிக்கிறது. காளி ஏந்தியிருக்கும் தலை, உயிருள்ள தலையே! காயியே ஏந்திய பிறகு, எவ்விதம் அது இறக்க முடியும்?
ராமநவமி, கிருஷ்ண ஜயந்தி மற்றும் துர்க்கா பூஜை பண்டிகைக் காலங்களில் காளிக்கு பூஜைகள் பெரிய அளவில் நடத்தப் பெறுகின்றன. இக்காலங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அமாவாசை தினங்களில் இங்கு காளிக்கு சிறப்புப் பூஜை நடைபெறுவதுடன் அன்றிரவு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

குருவருள் இருந்தால் திருவருள் கிட்டும் என்பார்கள்.

“”கடவுளை நேரில் காணமுடியுமா? அவரின் தரிசனம் கிட்டுமா?’’ என நரேன் எனும் விவேகானந்தர் குருதேவரிடம் கேட்க, “”இதோ நீ இப்போது என்னைக் காண்பதுபோல் அன்னை பவதாரிணியைக் காணமுடியும்’’ எனக் கூறுகிறார் குருதேவர்.
“”அன்னையிடம் எது கேட்டாலும் கிடைக்குமா? எனக்கு வாழ்க்கைக்குப் பொருள் வேண்டியிருக்கிறது’’ என குருதேவரிடம் குழந்தையாகக் கேட்கிறான் நரேன்.
“”நிச்சயம் கிடைக்கும்’’ என உறுதி கூறுகிறார் குருதேவர்.
“”எனக்காக நீங்கள் கேட்கக் கூடாதா?’’
“”நீயே உனக்கு வேண்டியதைக் கேள். அன்னை நிச்சயம் அருள்வாள்’’ என்கிறார் குருதேவர்.
“”அப்படியானால் அன்னையை நீங்களே எனக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும்’’ என வேண்டுகோள் வைக்கிறான் நரேன்.
“”நாளை காலையில் குளித்துவிட்டு பக்தி சிரத்தையுடன் வா. அவள் உனக்கு தரிசனம் தருவாள்’’ என்கிறார்.
இரவு முழுவதும் உறங்கவில்லை நரேன். அன்னையின் தரிசனத்தைவிட அன்னையிடம் என்னவெல்லாம் கேட்கலாம் என்ற யோசனையே முன் நிற்கிறது.
பொழுது புலர்ந்ததுதான் தாமதம். குளித்துவிட்டு வேகமாக குருதேவரை நோக்கி ஓடுகிறான் நரேன்.
அன்னைக்கான பூஜைகளை முடித்துவிட்டு இந்தப் பிரிய சீடனின் வரவுக்காகக் காத்திருக்கிறார் குருதேவர்.
“”வா குழந்தாய்! உள்ளே அன்னையிடம் சென்று உனக்குப் பிரியமானதை, தேவையானவற்றை நீயே கேட்டுப் பெறு. அன்னையும் உன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்’’ என சன்னிதியின் உள்ளே அனுப்பினார்.
அன்னையின் முன்சென்று நிற்கிறான் நரேன். மற்றவர்களுக்குச் சிலா ரூபமாகக் காட்சி தரும் அன்னை குருவருளால் நரேனுக்கு சித் ஸ்வரூபமாகக் காட்சி தருகிறாள். பார்த்துக்கொண்டே நிற்கிறான் நரேன். சிலை உயிர்பெற்று வந்தால், பக்தர்கள் சிலையாகி விடுவர் போலும்! அன்னையின் அழகை அள்ளிப் பருகுகிறான். அன்னை, ““நரேந்திரா! உனக்கு என்ன வேண்டும்?’’ எனக் கேட்கிறாள். அன்னையின் கேள்வி நரேனின் காதில் உட்புகவில்லை. அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறான். காட்சி முடித்து அன்னை சிலா ரூபமாகி விடுகிறாள். வெளியே வருகிறான் நரேன்.
கேட்கிறார் குருதேவர்: “”என்ன நரேன்? அன்னையைக் கண்டாயா? உன் குறைகளைச் சொல்லி தீர்வு கண்டாயா?’’ எனச் சிரித்துக்கொண்டே கேட்கிறார். குருவுக்குத் தெரியாததா?
சுய உணர்வு பெறும் நரேன், “”அன்னையைக் கண்டேன். ஆனால், எதுவும் கேட்கத் தோன்றவில்லை. மெய்மறந்து நின்றுவிட்டேன். இன்னொரு முறை நீங்கள் அனுமதித்தால், அன்னையிடம் நிச்சயம் கேட்டுவிடுவேன்’’ என்கிறான்.
“”சரி, நாளை வா’’ என அனுப்பி வைக்கிறார் குருதேவர்.
மறுநாளும் வருகிறான். இதேபோலவே நிகழ்வு நடக்கிறது. எதுவும் கேட்கவில்லை. 
“”இன்னும் ஒரேமுறை. எப்படியிருந்தாலும் இம்முறை கேட்டுவிடுவேன்’’ என்கிறான் பாலகன் நரேன்.
அதற்கடுத்த நாளும் நிகழ்வில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
குருதேவர் நரேனைப் பார்த்து, “”என்ன இம்முறையாவது கேட்டாயா? அன்னை அருளை வாரி வழங்கினாளா?’’ அவர் குழந்தையாகிக் கேட்டார்.
“”இல்லை.. இல்லை.. இல்லை.. அன்னையின் முன்னால் சென்று அவள் திருவுருவைத் தரிசிக்கும்போது எதுவுமே எனக்குக் கேட்கத் தோன்றவில்லை. என் இருப்பே அங்கு இல்லாமல் அவள் திருவருளின் முன்னே கரைந்துவிடுகிறது. பின்னர் எதைக் கேட்கமுடியும்? நினைப்பு என்ற ஒன்றிருந்தால் அல்லவா எதுவும் கேட்க முடியும்? எனக்காக நீங்கள் கேட்கக் கூடாதா?’’ என்று உள்ளம் குழைந்து கேட்கிறான் நரேன்.
“”உனக்கே அப்படியென்றால், சதா சர்வகாலமும் அவளையே தியானம் செய்து தரிசித்துக்கொண்டிருக்கும் எனக்கு எப்படியப்பா கேட்க முடியும்? என்னால் முடியாது என்பதால்தானே உன்னையே அவளிடம் கேட்கச் சொன்னேன். இனி, அவள் உனக்குக் காட்சி தர மாட்டாள். உனக்கு அருளப்பட்ட சந்தர்ப்பம் முடிவுபெற்றது’’ என குருதேவர் கூறிமுடிக்க, நரேன் அவர் காலில் விழுந்து கதறுகிறான்.
“”எனக்கு எதுவும் வேண்டாம் குருதேவா. அன்னையின் காட்சி மட்டும் கிடைத்துக் கொண்டிருந்தால் போதும். அருள்புரியுங்கள்’’ என குருதேவரிடம் மன்றாடுகிறான்.
“”இனி, உனக்கு இறை காட்சி கிட்டாது’’ என ஆணித்தரமாக மறுத்துவிடுகிறார் குருதேவர்.
இதன்பின்னர் மூன்று நாட்கள் அன்ன ஆகாரம் இல்லாமல், ஊண் உறக்கமின்றி அழுதவாறே அன்னையின் நினைவாகவே உன்மத்தனாக இருந்தான் நரேன். மூன்றாம் நாள் முடிவில் அன்னை பவதாரிணி அவருக்குக் காட்சி தந்து மறைந்தாள். உடன் குருதேவரை நோக்கி ஓடினான் நரேன்.
“”குருதேவா! அன்னையின் காட்சி இனி எனக்குக் கிடைக்காது என்று ஏன் அப்படிச் சொன்னீர்கள்? அன்னை இன்று எனக்குக் காட்சி தந்தாள்’’ என்று பூவாகி மலர்ந்து சிரித்தான் விவேகானந்தராய்.
“”அன்னையின் தரிசனம் உனக்கு எப்படிக் கிடைத்தது?’’ என அவரும் ஒன்றுமறியாத பாலகராய் கேட்டார்.
நடந்ததைச் சொன்னார் விவேகானந்தர்.
“”இன்று உன்னை ஆதாரமாக வைத்துச் சொல்கிறேன். எவர் ஒருவர் இறை தரிசனத்துக்காக மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி, ஊண் உறக்கமில்லாமல் இறை நினைவாகவே அவரை நினைந்து அழுகிறாரோ அவருக்கும் இறை தரிசனம் நிச்சயம் கிட்டும்’’ என்ற வரத்தை அளித்தார்.

அந்த அன்னையின் பாதார விந்தங்களைப் பணிவோம். சிவத்தின் மீதுதான் அன்னை நிற்கிறாள் என நினைக்காதீர்கள். நம் மனத்திலும் இருத்துங்கள் அவளை. அவளும் எப்போதும் அன்பு செய்யும் வரத்தைத் தப்பாது தந்தருள்வாள் என்பதில் ஐயமே இல்லை.

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.