Friday, June 10, 2011
அஞ்சலி - கணையாழி கஸ்தூரிரங்கன்
ஆதிமுதல் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, சிறந்த பத்திரிகையாளராக விளங்கிய சுவாசித் கஸ்தூரி ரங்கன் அவர்கள் கணையாழியின் புரவலராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். 1961 முதல் 1981 வரை டில்லியில் ‘நியூயார்க் டைம்ஸ்’ நிருபராகவும், 1981 முதல் பத்தாண்டுகளுக்கு ‘தினமணி’ பத்திரிகையின் இணையாசிரியராகவும், இதன்பின்னர் இரண்டாண்டுகளுக்கு ‘தினமணி’ ஆசிரியராகவும் பணியாற்றியவர். சமீபத்தில் அமரரான கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில் ஜுன் 5-ஆம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரை, நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலில் பஜனை நடைபெற்றது. பின்னர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் கணையாழி ஆசிரியர் குறித்துப் பேசினார்:
‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்’ என்ற பாடல், கஸ்தூரிரங்கன் அவர்களின் மனப்போக்குக்கு, லட்சியத்துக்கு, ஆன்மாவுக்கு நிறைவைத் தரக்கூடியதாக அமைந்திருந்தது. பாடலை ஆத்மார்த்தமாகப் பாடிய குழுவினருக்கு நன்றி’ எனக் கூறி, மேலும் தன் உரையைத் தொடர்ந்தார்.
‘‘ஓவியர்கள், ஓவியத்தின் கீழே தங்கள் பெயரைப் போட்டுக்கொள்கிறார்கள். சிற்பிகள் சிற்பத்தில் தங்கள் பெயரைப் பொறிப்பதில்லை. கஸ்தூரிரங்கன் ஒரு ஓவியரல்ல; அவர் ஒரு சிற்பி. தன்னுடைய புகைப்படம்கூட பத்திரிகையில் வருவதை அவர் விரும்பியதில்லை. கணையாழி பத்திரிகை மூலமாக எண்ணற்ற எழுத்தாளர்களை அவர் உருவாக்கினார். இந்த எழுத்தாளர்களின் தொடக்ககால எழுத்துகளை இனங்கண்டு கணையாழியில் வெளியிட்டு அந்த எழுத்தாளர்களை வளர்த்தார்.
“இந்த அஞ்சலி கூட்டத்தில் கஸ்தூரிரங்கன் அவர்களின் எந்த எழுத்துகளை வாசிப்பது என கஸ்தூரிரங்கனின் புதல்வி, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி போன்றோரிடம் கலந்தாலோசித்ததில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள், கணையாழி களஞ்சியத்தில் வெளிவந்த அவரின் முன்னுரையை வாசிக்கலாமே எனக் கூறியது பொருத்தமாகப்பட்டதால் அதை இங்கே வாசிக்கிறேன்’’ எனக் கூறி அந்த முன்னுரையை வாசித்தார்.
அந்த முன்னுரையிலிருந்து ஒரு பகுதியைப் பார்ப்போம்.
‘புது டில்லி. பொழுதுபோகாத ஒரு மாலை வேளை. நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்த போது பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது. அன்றைய விலைவாசியில் 5 ரூபாய் இருந்தால், 32 பக்கங்களில் 1000 பிரதிகளை அச்சடித்து விடலாம். ஆண்டுச்சந்தா ரூ.5/- என்று ஒரு ஆயிரம் பேரைப் பிடித்துவிடலாம். மேலும் 500 முதல் 5000 பிரதிகள் வரை ஏஜென்ட்டுகள் மூலம் விற்றுவிட, 10,000, 50,000 என்று சென்று 5 லட்சம் வரைகூட எட்டிவிடலாம் என்று திட்டமிட்டோம். பேஷாகச் செய்துவிடலாம் என்றார் ரங்கராஜன்.’
இவ்விதமாகத்தான் கணையாழி என்கிற அந்த இலக்கியத்தரம் வாய்ந்த பத்திரிகை தொடங்கப்பட்டது. கணையாழி களஞ்சியம் தயாரித்தபோது தொடக்க காலம் முதலே வெளிவந்த இதழ்களை வைத்திருந்து பெரிதும் களஞ்சியமாக வெளிவர எழுத்தாளர் வே.சபாநாயகம் உதவினார் என்று கஸ்தூரிரங்கன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்ததை திருப்பூர் கிருஷ்ணன் வாசித்தார்.
ஒருமுறை கணையாழி நிர்வாக ஆசிரியரான கஸ்தூரிரங்கனிடம், கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்த லா.சு. ரங்கராஜன் அவர்கள், ‘தினமணி’ ஆசிரியர் பதவியில் தொடர்ந்து நீடிப்பீர்களா என அவரிடம் கேட்க, அதற்கு அவர்,
‘‘கணையாழியின் நெடுநாள் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். கணையாழி விற்பனையை கல்கி நிறுவனத்தினர் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டிருப்பது பெரிய அதிர்ஷ்டமே. தினமணி ஆசிரியராக மீண்டும் பொறுப்பேற்க நேர்ந்தாலும் அதில் அதிகநாள் நீடிக்க விரும்பவில்லை. எப்போதும்போல் பின்னணியிலிருந்து கொண்டே கணையாழியை வளர்ப்பதில் கருத்தாய் இருப்பேன்.
‘‘மேலும், தினமணியில் மக்கள் நல்லாட்சி மன்றங்கள் அமைப்பதற்காக வாசகர்களின் ஆலோசனை கேட்டு அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு பதிலளித்து சுமார் இரண்டாயிரம் வாசகர்கள் இயக்கத்தில் சேர முன்வந்துள்ளார்கள். இவர்களைக் கொண்டு கிராமம்தோறும் நல்லாட்சி மன்றங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட விரும்புகிறேன்’’ எனத் தெரிவித்தார்.
அக்கூட்டத்தின் ஒருசில வீடியோ லிங்குகளை பேஸ்புக்கில் தந்துள்ளேன்.
http://www.facebook.com/video/video.php?v=10150203045866092
http://www.facebook.com/video/video.php?v=10150203040141092
http://www.facebook.com/video/video.php?v=10150203031316092
கணையாழிக்காகவே வாழ்ந்தவருக்கு நாமும் அஞ்சலி செலுத்துவோம்.
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
About Me
- சைதை முரளி
- பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.