Thursday, January 4, 2007

இசை சம்பந்தமாக...

வர்ணமெட்டு

இன்றைய வர்ணமெட்டுக்கு முன்னோடி நாட்டுப் பாடல்கள், நாடோ டிப் பாடல்கள் ஆகியவற்றின் நிரந்தரமான வர்ணமெட்டுதான். நாகரீகமும் பண்பாடும் வளர்ச்சியுற்றாலும் வர்ணமெட்டுகளின் ஜீவநாடியே நாட்டுப் பாடல்களின் பண்கள்தாம். இந்த முறையில்தான் தேவாரங்களும் பாடப்பட்டிருக்கின்றன. ஒரே மெட்டு. ஒரே தாளம். ஆனால், ஸாஹித்யங்கள் வேறு. இதே முறையில் திருமுறையும் ஒரே மெட்டில் ஓதப்படுகிறது.

இதே அடிப்படையில் நாமாவளிகளும் ஒலிக்கப்படுகின்றன. பழங்காலத்தில் கதைப் பாட்டுகள், நாடகப் பாடல்கள் ஆகியவை அடங்கிய புத்தகங்களில் ஒரு முக்கியப் பாடலின் பெயர் குறிப்பிடப்பட்டு 'இந்தப் பாட்டின் வர்ணமெட்டில் பாடவும்' என்று எழுதியிருப்பதைக் காணலாம். வர்ணமெட்டு என்பது ஒரு திட்டம். அதாவது ஒரு வரைபடம் போல. இயற்றுபவர்களின் மனத்தில் எழும் உணர்ச்சியைப் பொறுத்து வர்ணமெட்டு அமையும். ஆயினும் ஒரு தேர்ந்த இசைக் கலைஞரின் திறமையால் 'வரைபடமாக' இருந்த வர்ணமெட்டு, மெருகூட்டப்பட்டு, அழகூட்டப்பட்டு பொலிவுடன் மிளிரும்.

இன்று நிலவிவரும் அத்தனை பாடல்களும், காலங்காலமாகப் பாடிவரும் இசைக் கலைஞர்களின் தனித்தன்மை கொண்ட இசையாற்றலின் பயனால் மெருகேற்றப்பட்டு மிளிர்கின்றன என்பதுதான் உண்மை. தியாகராஜரும், முத்துஸ்வாமி தீட்சிதரும், சியாமா சாஸ்திரிகளும் தங்கள் பாடல்களை இன்றைய வித்வான்கள் பாடுவதுபோல் பாடியிருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்கள் பக்திப் பரவசத்தில் பாடினார்கள். பாடலின் ஒவ்வொரு
வரியையும் விதவிதமான சங்கதிகளில் பாடி, தங்களுடைய இசைத் திறமையை வெளிப்படுத்தி, மற்றவர்களின் பாராட்டுதலைப் பெறவேண்டிய தேவை ஏற்படவே இல்லை. இப்படிப் பக்திப் பரவசத்தில் பாடியபொழுதும்கூட இயற்கையாக அமைந்த ராகத்தின் உணர்ச்சி பாவமாக வெளிப்பட்ட வர்ணமெட்டுகள், வெவ்வேறு இசைப் புலவர்களால் இயற்றப்பட்டும்கூட ஏறக்குறைய ஒரே திட்ட வரையறைக்குள் அமைந்துள்ளன.

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.