Friday, January 5, 2007

ஆகம சாஸ்திரங்களில் நடனம்!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களுமே ஆகம சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி கட்டப்பட்டவைதாம். இந்த சாஸ்திர விதிகளில் கோயில் அமையவேண்டிய இடம், அவற்றின் அளவுகள், கட்டுவது தொடர்பான மற்றும் உருவங்களை அமைப்பது பற்றிய விதிகள், எவ்விதம் வணங்க வேண்டும் என்ற வழிமுறைகள் (பூஜை சடங்குகள் உட்பட), இசைப்பது, நாட்டியமாடுவது மற்றும் நாதஸ்வரம் வாசிப்பது வரையிலான விதிமுறைகள் அனைத்தும் அடங்கியுள்ளன.

நாட்டியம் ஆடுவதன் மூலம் பக்தியைச் செலுத்துதல் என்பது கோயில் சடங்குகளில் கட்டாய வழக்கமாகப் பின்பற்றப்பட்டுள்ளது. உச்சிக்காலப் பூஜையாகிய மதியவேளையில் நடத்தப்படும் வழிபாட்டில், 'தேவதாசிகள் நாட்டியமாடுதல்' என்பது நிகழ்த்தப்பட்டதாகக் காமிக ஆகமக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான கோயில்களில் தேவரடியார்களாகிய தேவதாசிகள் இதற்கெனவே நியமிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில கோயில்களில் மத குருக்களாகிய புரோகிதர்களும் பக்கவாத்திய இசைக் கருவிகளுடன் இறைவன் முன்பு நடனமாடியதாகவும் செய்திகள் உண்டு.

ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஆழ்வார் திருநகரி கோயில்களில் பணியாற்றும் 'அரையர்'களின் சேவையும் மேற்குறிப்பிட்ட சேவையைப் போன்றதுதான். சுருங்கச் சொன்னால் - 'அரையர்கள்' இசை நாட்டியர்கள். நாட்டியங்களை இசையுடன் ஆடுவார்கள். சுசீந்திரம் கோவிலில் ஆடப்படும் 'தாண்டவமூர்த்தி நடனம்' குறிப்பிடத்தக்க முக்கிய நடனமாகும்.

பல்லக்குத் தூக்கிகள் நாதஸ்வர இசையுடன் இணைந்து உற்சவமூர்த்தியைத் தூக்கிக்கொண்டு ஆடும் நடனமே 'தாண்டவமூர்த்தி நடனம்'. இந்நடனத்தைப் போன்றே சிறப்பானதொரு நடனத்தைத் திருவாரூர் கோயிலில் கொடியேற்று விழாவின்போது நிகழ்த்துவர். அந்நடனத்துக்கு 'அஜபா நடனம்' என்று பெயர்.

நித்யோத்ஸவம் எனப்படும் தினசரி வழிபாடு மற்றும் மஹோத்ஸவம் அல்லது பிரம்மோத்ஸவம் எனப்படும் பெரிய அளவிலான ஆண்டு வழிபாடு அனைத்துக் கோயில்களிலுமே நடத்தப்பட்டு வருகிறது. இசை மற்றும் நடனம் இவ்விழாக்களின் ஒரு பகுதியாக உள்ளது.

'ஸ்ரீபிரஷ்ண சம்ஹிதை'யில் 'நவசந்தி சடங்கு' என்ற வழிபாட்டுச் சடங்கு ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒன்பது சந்திகளில் இருக்கும் மூர்த்திகளான பிரம்மா, இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் மற்றும் ஈசானன் ஆகியோரை வழிபடும் முறையே 'நவசந்தி சடங்கு'. இச்சடங்கு கொடியேற்று விழாவின்போது நடத்தப்படும்.

அதன்பின்னர் தேவாரப் பாசுரங்கள் மற்றும் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் பாடப்படும். முடிவாக நடனம் நிகழ்த்தப்படும். 'கவுத்துவம்' என்கிற நடனத்துக்கென்றே தமிழில் இயற்றப்பட்ட பாடல்களான 'நவசந்தி கவுத்துவம்' என்கிற பாடல்கள் நடனத்துடன் நிகழ்த்தப்பெறும்.

இப்பாடல்களில் இறைவனை எப்படி வணங்கவேண்டும் என்பதோடு எந்த ராகத்தில், எந்தத் தாளத்தில் அப்பாடலைப் பாடவேண்டும் என்ற குறிப்புகளும் காணப்படுகின்றன. இப்பாடல்கள் 'ஜதி'யோடு தொடங்கி, அதனைத் தொடர்ந்து பாடகர்களால் சாஹித்யம் செய்யப்பெற்று முடிவாக மீண்டும் ஜதியிலேயே நடனம் முடியும். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள 'பத்ராசலம் கோயில்' மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 'செய்யூர் கோயில்' போன்றவை பழைய மரபுகளைக் கடைப்பிடித்துவரும் கோயில்களில் குறிப்பிடத்தகுந்தவையாக உள்ளன.

நவசந்தி கவுத்துவம் முடிந்த பின்னர், சில குறிப்பிட்ட பண்களால் 'புஷ்பாஞ்சலி' தேவதாசிகளால் நிகழ்த்தப்பெறும். அதன்பிறகு, 'புஜங்க நிருத்யம்' எனப்படும் தலைப்பிலான முக்கிய நாட்டியம் நிகழ்த்தப்படும்.

நவசந்தி வழிபாட்டுச் சடங்கில் மிக முக்கியமானது - சர்வ வாத்தியங்களையும் இசைப்பதுதான். இந்த சர்வ வாத்தியத்தில் பல்வேறு வகையான இசைக்கருவிகள் இசைக்கப்பெறும். பாஞ்சராத்ர ஆகமத்தையொட்டி விழா நடைபெறும் வைஷ்ணவக் கோயில்களில், பூஜைகளுக்குப் பின்னர் இவ்விழா தொடங்கும். அவ்வாறு தொடங்கும் விழா நான்கு மணி நேரங்களுக்கு மேல் நீடிக்கும்.

கொடியேற்று விழாவில் தேவதாசிகளால் 'புஷ்பாஞ்சலி' நடத்தப்பெறும். அதன்பின்னர் தேவார, திருவாசக, திருப்பல்லாண்டு பாசுரங்களை ஓதுவார்கள் ஓதுவர். பிறகு நிருத்யத்தினைத் தொடர்ந்து, நந்திகேஸ்வர வாத்தியம் எனப்படும் மிருதங்கம் மற்றும் பிரும்மதாளம் நிகழ்த்தப்பெறும்.

அதன்பிறகு, இலக்கியப் பாடல் வகைகளான சூர்ணிகா, அஷ்டகம், வெண்பா, கலித்தொகை, விருத்த வடிவங்களான அம்மானை, வண்ணம் மற்றும் உலா பாடல்களைத் தொடர்ந்து இசை வடிவங்களான கீதம், வர்ணம், கீர்த்தனம், கிருதி, பாடம் மற்றும் தில்லானா ஆகியவை இசைக்கப்பெறும். அதன்பின்னர், பல்வேறு இசைக்கருவிகளான திருச்சின்னன், முரளி (புல்லாங்குழல்), முகவீணை, தகோர வாத்தியம், மல்லாரி, தங்கா, கஞ்ச், மவூரி, புஜங்கேஸ்வரா போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பெறும்.

'புஜங்க நிருத்யம்' நாட்டிய வகைகளில் மிக முக்கியமானதாகும். தேர்த்திருவிழாவின்போது தேர் நிற்கும் குறுக்குத் தெருக்களில் நாதஸ்வரக் குழுவினர் வாசிக்க, தேவதாசிகள் நடனமாடுவர். தேர் கோயிலுக்கு வந்தபின்னர், தேவதாசிகள் - லாலி, நலங்கு மற்றும் ஊஞ்சல் பாடல்களைப் பாடுவர்.

கோயில் விழாக்களில் நாதஸ்வரத்துக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. விழாக்களில் சுவாமியைப் பல்லக்குத் தூக்கிகள் தூக்கிக்கொண்டு செல்ல, நாதஸ்வரக் குழுவினர் நாதஸ்வரம் வாசிக்க, தேவதாசிகள் முக்கியத் தெருக்களில் மற்றும் தெருச் சந்திகளில் சிலவகை நடனங்களை ஆடுவார்கள். நாதஸ்வரத்துக்குப் பக்கவாத்தியமாக தவில் வித்வான் தவில் வாசிப்பார். இந்தத் தவில் வித்வான், சுவாமியைப் பல்லக்குத் தூக்கிகள் தூக்கப்
போகிறார்கள் என்பதைப் பக்தர்களுக்கு உணர்த்த, 'அலரிப்பூ' என்ற ஒருவகை இசையை வாசிப்பார். இதன்மூலம் சுவாமி கிளம்பத் தயாராகிவிட்டார் என பக்தர்கள் அறிந்துகொள்வர்.

கோயில் விழாக்கள் ஆரம்பிக்கும் முன்னர், 'திக்பந்தனம்' எனப்படும் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இச்சடங்கு பல்வேறு திக்குகளிலும் உள்ள தெய்வங்களைச் சாந்தி செய்வதற்காக நடத்தப்படுவதுடன், ராக, தாள மற்றும் நாட்டிய சமர்ப்பணங்களும் ஒவ்வொரு தெய்வத்துக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.

நவசந்தி கவுத்துவம் என்பது சொல்லுக் கட்டுகள், ஜதிகள் என்கிற சிறப்பான தாளங்கள் மற்றும் சாஹித்தியங்கள் ஆகியவற்றின் கூட்டுக் கலவையே என 'பரதார்ணவம்' தெரிவிப்பதுடன், இதில் 'க' என்பது வெள்ளையையும், 'யு' என்பது சிவப்பையும் மற்றும் 'த' என்பது கறுப்பையும் குறிப்பதுடன், இந்த அசைகள் முறையே சரஸ்வதி, மஹாலக்ஷ்மி மற்றும் பார்வதியைக் குறிப்பதாகவும் பரதார்ணவம் மேலும் தெரிவிக்கிறது.

ஓர் எடுத்துக்காட்டு கூறவேண்டுமெனில், ஸ்ரீபிரஷ்ண சம்ஹிதை - கருட வழிபாட்டை, திரிபுட தாளம், மத்யம ஸ்வரம், கெளட ராகம் மற்றும் விஷ்ணு கிரந்தம் எனப்படும் நிருத்தத்தின் மூலம்தான் வழிபடவேண்டும் எனக் கூறுகிறது. எனவேதான் தாள, ஸ்வர, ராக மற்றும் நிருத்த வடிவங்கள் நாட்டிய சாத்திரங்களில் முக்கியமாக விளக்கப்படுகின்றது.

வீதியுலா செல்லும் உற்சவமூர்த்தியை இசை மற்றும் நடனக் குழுவைச் சேர்ந்தவர்கள் எவ்விதம் ஒழுங்குமுறையோடு தொடர வேண்டும் என்பதை 'தெப்தாகமத்தின்' 91-வது அத்தியாயம் விவரிக்கிறது. இதன்படி, மிருதங்கம் மற்றும் வாத்தியங்கள் வாசிப்பவர்கள் முன்செல்ல, நடனமாடுபவர்கள் மற்றும் மத்தளம் வாசிப்பவர்கள் தெருவின் இடதுபுறமும், புல்லாங்குழல் வாசிப்பவர் மற்றும் மற்ற இசைக்கலைஞர்கள் தெருவின் வலதுபுறமும் செல்ல, ஆகமங்களில் 'ருத்ர கனிகா' எனக் கூறப்படும் தேவதாசிகள் தெருவின் இருபுறங்களிலும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வரவேண்டுமென அந்த ஆகமம் தெரிவிக்கிறது.

காந்தாரவம் என்று அறியப்படுகின்ற காந்த ராகத்தால் பிரம்மாவை வழிபடவேண்டும் என ஸ்ரீபிரஷ்ண சம்ஹிதை குறிப்பிடுகிறது. 'துருவ தாளத்தின் ஒருவகையாகிய 'நாட்டிய தண்டி', துருவ தாளத்தாலும் கமல நிருத்தத்தாலும் பிரும்மாவை வழிபட வேண்டும் எனத் தெரிவிக்கிறது. இந்நிருத்தம் நாட்டிய நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இந்நிருத்தத்தில் வலது கையில் ஹம்சஸ்ய முத்திரையும், இடது கையில் கச்சுரா முத்திரையும்
பயன்படுத்தப்படுகிறது.

ஹம்சஸ்ய முத்திரை என்பது நடுவிரல், மோதிர விரல் மற்றும் சுண்டுவிரல் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொட்டுக்கொள்ளாமல் காண்பிக்கப்படும் அபிநயமாகும். சுட்டுவிரல் மற்றும் கட்டைவிரல் இணைத்துக் காட்டப்படும் முத்திரை கச்சுரா. இம்முத்திரை குறித்து நிருத்த ரத்னாவளியிலும் சங்கீத ரத்னாகரத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது.

கச்சுரா முத்திரையில் சுட்டுவிரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்க, சுண்டுவிரல் மட்டும் வெளியில் தெரியுமாறு அபிநயம் பிடிப்பதுடன், கட்டைவிரலானது சுட்டுவிரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு அபிநயம் காட்டவேண்டும்.

'சங்கீத தர்ப்பணம - சாம தாளம், நாட்டை ராகம் மற்றும் நாட்டிய சாத்திரத்தில் விளக்கப்பட்டுள்ள லலிதா நிருத்தத்தினால் தேவர்களின் தலைவனான இந்திரனை வழிபட வேண்டும் எனக் கூறுகிறது. இந்திரனுக்குரிய முத்திரை பாடகா என்று கூறும் பரதார்ணவம், இம்முத்திரை ஸ்வஸ்திக் குறியீடு போன்று காட்டப்படும் என்றும் கூறுகிறது.

நெருப்புக் கடவுளான அக்னிக்குரிய தாளம் அட, ராகம் கெளரி, நிருத்தம் சர்வதோபத்ரா. நாட்டிய நூல்களில் மேற்குறிப்பிட்ட நிருத்தம் குறிப்பிடப்படவில்லை. வலது கையில் திரிபாடகமும், இடது கையில் கங்குலமும் தாங்கிய முத்திரை - சர்வதோபத்ரா நிருத்தத்தைத்
தோற்றுவிக்கின்றது. இம்முத்திரையில் காட்டப்படும் தாழம்பூ மலர் மற்றும் நெருப்பு ஆகியவை அக்னிக் கடவுளை நினைவுறுத்துகின்றன.

இறப்புக்குரிய கடவுளான யமன் - மங்களா அல்லது ஜெயமங்களா தாளத்தாலும், தேசிக அல்லது தேஷாக்க்ஷி ராகத்தாலும், சர்வதோபத்ரா நிருத்தத்தாலும் வழிபடப்பெறுகிறார்.

தென்மேற்கு திசைக்குரிய கடவுளான நிருதி - ஜெய தாளம், தேஷாக்க்ஷி ராகம் மற்றும் புஜங்கத்ரஸ நிருத்தத்தால் வணங்கப்பெறுகிறார்.

மேற்கு திசைக்குரிய கடவுளான வருணன் - பத்ர தாளம், நாட்டை ராகம் மற்றும் கமல நிருத்தத்தால் வழிபடப் பெறுகிறார். இக்கமல நிருத்தம் நாட்டிய நூல்களில் குறிப்பிடப்படவில்லை. எனினும், பரதார்ணவத்தில் குஞ்சித நிருத்தத்துக்கு அடுத்ததாக உள்ளதாகக் கருதப்படுகிறது. குஞ்சிதத் தாண்டவம் இந்நிருத்தத்தில் அடங்கும். குஞ்சிதத் தாண்டவத்தில் முன்பாதங்கள் தரையில் பதிந்திருக்க, குதிகால்கள் உயர்ந்திருக்கும்.

காற்றுக்குரிய கடவுளான வாயு - ஜம்ப தாளம், ஸ்ரீ ராகம் மற்றும் பிருஷ்ட குட்டினம் எனும் நிருத்தத்தால் வணங்கப்படுகிறார். இந்த நிருத்தத்தில் இடது கையில் அர்த்த பாடக முத்திரையும், வலது கையில் ஆராள முத்திரையும் காண்பிக்கப்பெறும்.

வடக்கு திக்கிற்கு அதிபதியான குபேரன் - ஆனந்த தாளம், நாட்டை நாராயணி மற்றும் மது மாதவி ராகத்துக்குப் பிறந்த புத்திர ராகமான மோகன ராகம் மற்றும் சுக்ர மண்டலம் எனப்படும் மண்டல நிருத்தத்தின் மூலம் வணங்கப்படுகிறார். குபேரனின் நெருங்கிய நண்பரான சிவனுக்கும் இந்த நடனம் உரியதாகும்.

நவசந்தி கவுத்துவம் நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்கள் குறித்து ஆகமத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இப்பாடல்களை யார் இயற்றினர் என்பதும் தெரியவராததோடு, ஸ்ரீ கிட்டப்பா மற்றும் ஸ்ரீ சிவானந்தம் வசமிருந்த இப்பாடல்களின் கையெழுத்துப் பிரதிகளை, முன்னர் குறிப்பிட்ட தஞ்சை நால்வரணி பரம்பரையைச் சேர்ந்தவர்கள் - பொன்னையா, சின்னய்யா, சிவானந்தம் மற்றும் வடிவேலு - பத்திரப்படுத்தி
வைத்துள்ளனர்.

பதினான்கு பாடல்களில் ஐந்து 'பஞ்சமூர்த்தி கவுத்துவம்' பாடல்கள் - பஞ்சமூர்த்திகளான கணேசர், சுப்பிரமணியர், திருஞான சம்பந்தர், சண்டிகேஸ்வரர் மற்றும் நடராஜர் ஆகிய தெய்வங்களைப் புகழ்வதாக உள்ளது. பஞ்சமூர்த்தி கவுத்துவமில் கர்நாடகக் கான ராகங்களான நாட்டை, கெளலா, ஆரபி, ஸ்ரீ, வராளி ஆகிய ராகங்களில் (ஸ்வர மற்றும் சாஹித்தியங்களுடன்) பாடல்கள் இசைக்கப்பெறுகின்றன.

இந்த ஐந்து பாடல்களையும், சிதம்பரத்தில் திருவாதிரைத் திருவிழாவில் - தேவதாசிகள் நடனமாட இசைப்பர். மற்ற ஒன்பதான 'நவசந்தி கவுத்துவம்' பிரம்மாவை நடுநாயகமாகக் கொண்டு மற்ற திக்குகளிலுள்ள தெய்வங்களைப் புகழ்வது. இப்பாடல்கள் சொல்லுக்கட்டு எனப்படும் ஜதி மற்றும் சாஹித்தியங்களின் வழியே இறைவன் அல்லது அடியார்களைப் புகழ்வனவாக உள்ளன.


ஆண்டுக்கொரு முறை நடக்கும் பிரம்மோத்ஸவ அல்லது மஹோத்ஸவ விழா வெற்றிகரமாக நடக்க அஷ்டதிக்குப் பாலகர்களுக்கு இடையில் பிரும்மாவை நடுநாயகமாக வைத்து வழிபடும் 'நவசந்தி கவுத்துவம்' - ஜதியில் தொடங்கி, ஜதியிலேயே முடிவுறும். பாடல்கள் - ஆரோஹண, அவரோஹண வடிவில் ராக தாளங்களுடன் வழங்கப்பெறும்.

1 comment:

Anonymous said...

Thank you sir for sharing:)

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.