Thursday, January 4, 2007

இசை சம்பந்தமாக...

பாகவத மேளம்!

இக்கட்டுரையும், இனி வெளியிட இருக்கும் கட்டுரையான 'ஆகம சாஸ்திரங்களில் நடனம்' என்ற கட்டுரையும் Bharatanatyam: The Tamil Heritage என்ற நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு முறையே புதிய பார்வை மற்றும் ஓம் சக்தி மாத இதழ்களில் வெளியானவை. இனி கட்டுரைக்குள் செல்வோம்.

'யக்ஞ கானம்' என்பது தஞ்சை நாயக்க மன்னர்களின் அரசவையில் இலக்கிய அமைப்பில் இசைக்கப்பட்ட ஒரு வடிவம். பின்னாளில் நாடகமாக நடத்துவதற்கேற்ப உண்மையிலேயே இசை வடிவமாக இயக்கப்பெற்ற திருஷ்ய காவியமாக விரிவாக்கப்பட்டு, பாகவத மேளா நாடகமாக உருவாகியது. பாகவதப் பரம்பரையில் வந்தவர்கள் இதைத் தொடர்ந்து நாட்டிய நாடகமாக அரங்கேற்றியதால் 'பாகவத மேளா நாடகம்' என அழைக்கப்பெற்றது.

நாடகக் கலையை வளர்ப்பதெற்கென்றே அச்யுதப்ப நாயக்கரால் ஐநூறு பிராம்மணர்களுக்கு (பாகவதர்கள்) கிராமம் ஒன்ற வழங்கப்பட, அது அச்யுதபுரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அப்போதிருந்தே மே மாத மத்தியில் வரும் நரசிம்ம ஜெயந்திக்கு ஒவ்வொரு வருடமும் இந்த பாகவதப் பரம்பரையில் வழிவழியாக வந்தவர்கள் நாட்டிய நாடக விழாக்களை வரதராஜப் பெருமாள் கோயிலின் முன்பு நடத்தி வந்தனர்.

முதலில் நாயக்கர்களாலும், பின்னர் மராட்டிய மன்னர்களாலும் ஊக்குவிக்கப்பட்டு தஞ்சை மாவட்ட கிராமங்களுக்கும் பரவிய இந்த 'பாகவத மேளா நாடக மரபு' பழைமையானது. இந்நாடகத்தைச் சமீபகாலம் வரை தவறாமல் மெலட்டூர் வெங்கட்ராம சாஸ்திரியும் மற்றும் அவரது குடும்பத்தாரும் நடத்தி வந்தனர். பாகவத மேளா நாடகக் களஞ்சியம் - சூலமங்கலம், ஊத்துக்காடு, சாலியமங்கலத்தைச் சேர்ந்த கலைஞர்களாலும் விரிவாக்கப்பட்டு வளமூட்டப்பட்டது.

தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டபோது, உயர்தர நாட்டியம் ஆடிவந்த நால்வர் அணி (பொன்னையா, சின்னய்யா, சிவானந்தம் மற்றும் வடிவேலு) இந்தப் பாகவத மேளா நாட்டிய நாடகத்தைச் சிறப்பாக நடத்த முயற்சி செய்து பார்த்தது. எனினும், பாகவதர்கள் வழங்கும் நாடக அமைப்புதான் பொருத்தமாகவும் இயற்கையாகவும் அமைந்தது. பாகவத மேளா நாடகத்தில் பெண்கள் வேடத்தைக்கூட, பிராம்மண குலத்தைச் சேர்ந்த ஆண்களும் இளம் சிறார்களுமே ஏற்று நடித்த காரணத்தால் 'பாகவத மேளம்' என்ற சிறப்புப் பட்டத்தைப் (நட்டுவனார் மற்றும் தேவதாசி சமூகங்கள் 'நட்டுவ மேளம்' எனப் பெற்றமைக்குப் போட்டி போன்று) பெற்றது.

பாகவத மேளத்தின் கட்டமைப்பானது நாராயண தீர்த்தர் இயற்றிய 'கிருஷ்ணலீலா தரங்கிணி'யிலிருந்து பெறப்பட்டிருக்கவேண்டும் எனக் கருதப்படுகிறது. நாராயண தீர்த்தரும், ஆந்திர தேசத்தைச் சேர்ந்த சித்தேந்திர யோகியும் (குச்சிப்புடியில் 'பாமகலாபம்' என்ற நாட்டிய வகையால்
ஈர்க்கப்பட்டவர்) சேர்ந்து இந்த 'பாகவத மேளா' நாட்டிய நாடக மரபை தென்னிந்தியாவில் வளர்ச்சியுறச் செய்திருக்கவேண்டும்.

பாகவத மேளா நாட்டிய நாடகக் களஞ்சியத்தின் நடுப்பகுதியில் பிரகலாத சரித்திரம், மார்க்கண்டேய உஷா பரணீயம், ருக்மாங்கத கோலாபம், சீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், துருவ சரித்திரம், கம்ச வதம், அரிச்சந்திரா மற்றும் பாணாசுரவதம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. பரத நாட்டியத்துடன் சேர்ந்த நிருத்தத்தில் - அடவு, ஜதிகள் மற்றும் தீர்மானங்களைக் கொண்டு இசைக்குறிப்புகளுக்கு ஏற்றாற்போல உணர்ச்சிப்பூர்வமாக
வெளிப்படுத்தும் அபிநய அசைவுகளையும் அங்கமாகக் கொண்டது பாகவத மேளம்.

பாகவத மேளத்தில் வாசிக அபிநயமும் (நான்கு அபிநய வகைகளில் ஒன்று) தேவைப்பட்ட சூழலில் பயன்படுத்தப்பட்டது. பெண் பாத்திரமேற்பவர்கள் பரத நாட்டிய கலைஞர்களைப் போன்று உடையணிந்து, தஞ்சையில் மராட்டிய அரசவையில் பாகவத மேளாவில் பங்கேற்றனர். கேரளாவிலும் இந்த பாகவத மேளா நாட்டிய நாடகங்கள் நள்ளிரவில் ஆரம்பிக்கப்பட்டு, காலையில் சூரிய உதயத்துக்கு முன்புவரை கோவிலின் முன்பு சிறப்பாக
வேயப்பட்ட கூரை வீட்டில் தொடர்ந்து நடக்கும். உண்மையான பக்தி அர்ப்பணிப்போடு நடத்தப்பட்டு வந்த இந்நாடகங்களின் முக்கியத்துவம் இப்போது அருகி வருகின்றது.

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.